இந்த வாரம் பிக்பாஸுக்கு கமல் வருவாரா? மாட்டாரா?... ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்கள்
சென்னை : 100 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 60 நாட்களை எட்டி விட்டது. பிக்பாஸின் கடந்த நான்கு சீசன்களை போலவே இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் ஐக்கி பெர்ரி வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வாரம் அதிகபட்சமாக 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

நாமினேஷனில் 10 பேர்
தற்போதுள்ள 13 போட்டியாளர்களில் இந்த வார கேப்டனான நிரூப், புதிய வைல்ட்கார்ட் என்ட்ரிகளான அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய மூன்று பேர் தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இவர்களில் யார் வெளியேற போகிறார் என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவல்களின் படி அபிஷேக் மற்றும் அபினய் இருவரும் தான் குறைந்த ஓட்டுக்களை பெற்றிருப்பதாகவும், இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த வாரம் கமல் வருவாரா
இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு உள்ளதோ, அதே அளவிற்கு இந்த வார இறுதி நாள் எபிசோட்களை தொகுத்து வழங்க கமல் வருவாரா அல்லது இந்த வாரமும் ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் அதிகம் கேட்டு வருகின்றனர். கமல் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல்
சமீபத்தில், கமல் ஹவுஸ் ஆஃப் கதர் துவக்க விழாவிற்காக சிகாகோ சென்று வந்த கமலுக்கு நவம்பர் 22 ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் கடந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கமலும் மருத்துவமனையில் இருந்து வீடியோ கால் மூலம் பேசினார்.

மருத்துவமனை அறிக்கை
இந்நிலையில் கமல் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதுமாக குணமாகி விட்டார். இருந்தாலும் டிசம்பர் 3 ம் தேதி வரை தனிமையில் இருக்க அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 முதல் தனது வழக்கமான பணிகளை தொடர அவர் முழுவதுமாக தயாராகி விடுவார் என மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

ஞாயிற்றுகிழமையாவது வருவாரா
இதனால் டிசம்பர் 4 ம் தேதியான இந்த வார சனிக்கிழமை ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்க கமல் வருவாரா. குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமை ஷோவிற்காவது வருவாரா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

இந்த வாரமும் ரம்யா தான்
ஆனால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பு செய்யப்படும் ஷோவிற்கான ஷுட்டிங் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலேயே நடத்தப்பட்டு விடும். கமலின் தனிமைப்படுத்துதல் காலம் நாளையுடன் தான் முடிகிறது. அதனால் இந்த வார ஷோவையும் ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

இருவரும் ஒரே மேடையில்
அடுத்த வாரத்தின் சனிக்கிழமை எபிசோடின் துவக்கத்தில் கமல், ரம்யா கிருஷ்ணன் இருவரும் இணைந்து வர உள்ளதாகவும், கமலுடன் பேசிய பிறகு ரம்யா கிருஷ்ணன் புறப்பட்டு செல்ல உள்ளதாகவும், அதன் பிறகு கமல் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. இந்த வாரம் முழுவதும் கமல் ஓய்வில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











