கேயார் பதவி விலகுவாரா... அல்லது நேற்றைய பொதுக்குழு கூட்டம் ரத்தாகுமா?
சென்னை: ஒரு வழியாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் மீது கலைப்புலி தாணு கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுவிட்டது.
நேற்று நடந்த சிறப்புப் பொதுக்குழுவில் இந்த தீர்மானத்தை ஓட்டெடுப்புக்கு விட்டபோது கேயாருக்கு எதிராக 261 வாக்குகளும், ஆதரவாக 186 வாக்குகளும் பதிவாகின.

ஆனால் இந்த பொதுக்குழுவும் அதில் நடந்த வாக்கெடுப்பும் செல்லுமா, கேயார் பதவி விலகி, புதிதாக தேர்தல் நடத்தப்படுமா என்பதுதான் இப்போதைய கேள்விகள்.
காரணம் இந்தச் சிறப்புப் பொதுக்குழுவே செல்லாது எனக் கோரி வழக்குப் பதிவு செய்யக் கிளம்பியிருக்கிறது ஒரு கூட்டம். ஒன்றிரண்டல்ல... 90 தயாரிப்பாளர்கள். இவர்கள் வாக்களிக்கத் தகுதியற்றவர்கள் என்று தாணு தரப்பு ஆட்சேபித்ததால், வாக்கெடுப்பிலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர்.
ஆனால் இவர்களில் கங்காரு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மட்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, வாக்களிக்க அனுமதி பெற்றுவிட, இப்போது மற்ற 89 பேரும் இதே போல தங்களுக்கும் வாக்களிக்க உரிமை வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை நாட உள்ளனர்.
இது தெரிந்த கேயார், தனக்கு எதிரான நம்பிக்கை இல்லை தீர்மானம் வெற்றி பெற்றதை நினைத்து பெரிதாக பதறவில்லை. எப்படியும் வழக்குப் போட்டு இந்த வாக்கெடுப்பையே ரத்து செய்யப் போகிறார்கள் என்ற தெம்பில், நான் எதுக்கு ராஜினாமா செய்யணும்...? இந்த சிறப்பு பொதுக்குழவில் நடந்த வாக்கெடுப்பு முறையே தவறானது என்று கூறி வருகிறார்.
சினிமா ஒரு பக்கம் சீரழிந்து கொண்டிருக்கிறது. எடுத்த படங்கள் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கின்றன. திரையரங்குகள் ஒழிந்து, மல்டிப்ளெக்ஸ்கள் சினிமாவை ஆள ஆரம்பித்துவிட்டன. ஆக, தயாரிப்பாளர்கள் கையைவிட்டு நழுவிக் கொண்டிருக்கிறது சினிமா...
இதையெல்லாம் புரிந்து, சினிமா சூழல் ஆரோக்கியமாக இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், இப்படி ஆண்டு முழுவதும் அடித்துக் கொண்டிருந்தால்.. சினிமா வெளங்கிடும்!


Click it and Unblock the Notifications











