அமரன் படத்தை போல வசூல் அள்ளுமா ‘சேயோன்’. சாமி கதைகளை நோக்கி தமிழ் சினிமா செல்வது ஏன்?
சென்னை: காந்தாரா படத்தின் பாதிப்பு தான் சாமி கதைகளை நோக்கி தமிழ் சினிமா செல்ல முக்கியக் காரணம் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. கன்னட திரையுலகில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான காந்தாரா முதல் பாகம் வெறும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியது.
அதன் 2வது பாகமான காந்தாரா தி லெஜண்ட் சாப்டர் 1 திரைப்படம் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி சுமார் 850 கோடி வரை வசூல் ஈட்டியதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. எப்படி பாகுபலி திரைப்படம் இந்தியளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போலத்தான் காந்தாரா தாக்கமும் தற்போது தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்திலும் ராஜ்கிரண் கருப்பசாமியாக வருவது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. பைசன் படத்தில் பசுபதி மற்றும் துருவ் விக்ரம் சாமியாடினர். தொடர்ந்து பல படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் குல தெய்வ வழிபாடு மற்றும் கடவுள் சார்ந்த காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
சூர்யாவின் கருப்பு: முன்னணி நடிகர்களும் இதில் சவாரி செய்யத் தொடங்கி விட்டனர். பாகுபலி போல ஒரு படத்தை உருவாக்க நினைத்த சூர்யா கங்குவா படத்தைக் கொடுத்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், கருப்பு படத்திலும் ஆன்மிக டச்சை ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கருப்பு படத்தில் கையில் அருவாளுடன் சூர்யா போஸ் கொடுத்து அமர்ந்திருந்ததை போலவே சேயோன் படத்திலும் சிவகார்த்திகேயன் போஸ் கொடுத்துள்ளார் போன்ற கம்பேரிசன்கள் சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளன.

சிவகார்த்திகேயனின் சேயோன்: கமல்ஹாசன் வேலுடன் முதல் போஸ்டரை வெளியிடும் போது ஃபர்ஸ்ட் லுக்கில் சிவகார்த்திகேயன் முருகக் கடவுளாகவே நடிக்கப் போகிறாரா என்கிற ஹைப் உருவானது. ஆனால், சேயோன் டைட்டிலுடன் வெளியான அறிமுக வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுவும் ஒரு சாமியாடி படமாக உருவாகப் போகிறதா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர். சிவகுமார் முருகேசன் தாய் கிழவி படத்தை போல ரூரல் என்டர்டெயினர் படமாக சேயோன் உருவாகப் போவது போலத்தான் தெரிகிறது.
அமரன் போல 300 கோடி வருமா?: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கைப் படமாக வெளியானது. அந்த படம் பான் இந்தியா அளவில் ரசிகர்களை கவர்ந்து 300 கோடி வசூலை ஈட்டியது. அமரன் படத்தை போல சேயோன் திரைப்படம் 300 கோடி வசூலை ஈட்டுமா? என்பது டவுட்டு தான். ஆனால், காந்தாரா போல படத்தில் ஏதாவது பான் இந்தியா ரசிகர்களை ஈர்க்கும் அம்சங்கள் இடம்பெற்றிருந்தால் கண்டிப்பாக பெரிய வசூல் வேட்டையை சேயோன் படமும் ஈட்டும். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மதராஸி மற்றும் பராசக்தி படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், மினிமம் கியாரண்டி படமாக கண்டிப்பாக சேயோன் மாறும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications