ஹாலிவுட்டே வேண்டாம்னு வந்துட்டாரா? இந்தியாவுக்கு திடீர் விசிட் அடித்துள்ள வில் ஸ்மித்.. என்ன ஆச்சு?
மும்பை: ஆஸ்கர் அறை சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக வில் ஸ்மித் வெளியே தென்பட்டு இருக்கிறார். அதிலும், இந்தியாவில் உள்ள மும்பையில் என்பது தான் ஒட்டுமொத்த உலகத்தையும் தற்போது திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆக்ஷன் ஹீரோவான வில் ஸ்மித் கிங் ரிச்சர்ட் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி முதல்முறையாக தனது ஆஸ்கர் விருதை வென்றார்.
ஆனால், ஆஸ்கர் விருது வாங்குவதற்கு முன்னதாக தனது மனைவியை கிண்டல் செய்த கிறிஸ் ராக் எனும் நடிகரை ஆஸ்கர் மேடையிலேயே ஓங்கி ஒரு அறை அறை விட்டது அவருக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது.

முதல் ஆஸ்கர்
பேட் பாய்ஸ், மென் இன் பிளாக், பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ், அலி என ஏகப்பட்ட படங்கள் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் வில் ஸ்மித். இரண்டு முறை ஆஸ்கர் நாமினியாக மாறிய நிலையிலும், 2022 வரை அவருக்கு ஆஸ்கர் விருதே கிடைக்கவில்லை. இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனைகளான வில்லியம் சகோதரிகளுக்கு பயிற்சி கொடுத்த அவர்களின் தந்தை கிங் ரிச்சர்ட்டின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான முதல் ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்.

ஆஸ்கர் அறை
ஆனால், அதற்கு முன்னதாக கிறிஸ் ராக் எனும் காமெடி நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் மொட்டை தலை பற்றி அடித்த கமெண்ட் வில் ஸ்மித்தை கோபத்திற்கு ஆளாக்கியது. மேடை ஏறி ஓங்கி ஒரு அறை விட்டு அசிங்கமாகவும் அவரை திட்டி எச்சரித்தார் வில் ஸ்மித், இந்த விஷயம் உலகளவில் பூதாகரமாக வெடித்த நிலையில், ஆஸ்கர் விழாவே மறந்து போகும் அளவுக்கு அந்த ஒரு அறை டிரெண்டானது.

10 ஆண்டுகள் தடை
இதன் காரணமாக நடிகர் வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் நிர்வாகம் 10 ஆண்டுகள் தடை விதித்து அவரது செயலை கண்டித்துள்ளது. ஆனால், ஆஸ்கர் விருதை திருப்பித் தர தேவையில்லை என்றும் கூறியுள்ளது. அவர்கள் தண்டனை கொடுப்பதற்கு முன்னதாகவே ஆஸ்கர் குழுவில் இருந்து வில் ஸ்மித்தே விலகியது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் வில் ஸ்மித்
அந்த நிகழ்வுக்குப் பிறகு நடிகர் வில் ஸ்மித் வெளியே எங்கேயும் தென்படவில்லை. இந்நிலையில், மும்பையில் சனிக்கிழமையான இன்று பிரைவேட் விமான நிலையமான கலினா விமான நிலையத்திற்கு வந்து இறங்கி உள்ளார். அப்போது, வெள்ளை உடை அணிந்த நபருடன் அவர் பேசும் புகைப்படம் க்ளிக் செய்யப்பட்ட நிலையில், அந்த போட்டோக்கள் தற்போது உலகளவில் தீயாக பரவி வருகிறது.

உலகளவில் டிரெண்டிங்
#WillSmith என்கிற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து அந்த போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர். ஆஸ்கர் சர்ச்சைக்கு பிறகு முதல் முதலாக வில் ஸ்மித் அதுவும் இந்தியாவில் தென்பட்டதை பார்த்து பலரும் ஒரே ஆச்சர்யத்தில் வியந்து போயுள்ளனர். மீண்டும் ஆஸ்கர் அறை மீம்களை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியர்கள் ஆதரவு
ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் நடந்து கொண்டது தவறு என உலகின் பல நாடுகளில் இருந்தும் எதிர்ப்பு வந்தாலும், இந்தியர்கள் பலரும் அவரது செயலை பாராட்டி இருந்தனர். இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் ட்வீட் போட்டு நோயாளி மனைவி பற்றி அவதூறாக பேசுவது ஜோக்கா என கிறிஸ் ராக்கின் செயலை கண்டித்து இருந்தனர். மனைவியை பற்றி தப்பா பேசினால் இதுதான் கதி என்றும் வில் ஸ்மித்தை இந்தியர்கள் கொண்டாடினார்கள்.

என்ன காரணம்
இந்தியாவில் ஏதாவது புதிய படம் அல்லது வெப்சீரிஸ் போன்றவற்றில் வில் ஸ்மித் நடிக்க உள்ளாரா? அல்லது வேறு என்ன காரணத்திற்காக மும்பை வந்துள்ளார் என்பது புரியாமல் பலரும் திகைத்து வருகின்றனர். கூடிய சீக்கிரமே வில் ஸ்மித்தின் வருகைக்கான காரணம் தெரிந்து விடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications