இந்த படங்களின் ரிலீசும் தள்ளி போகிறதா... ட்விட்டரில் நடந்த மாற்றத்தால் ரசிகர்கள் கவலை
சென்னை : புத்தாண்டில் பல பெரிய படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளதால் மீண்டும் சினிமா சார்ந்த தொழில்கள் செழிக்கும், அதுவும் அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீசால் தியேட்டர் வசூலும் அமோகமாக நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் 2020 ல் மார்ச் மாதத்தில் வந்த கொரோனா, 2021 ல் பிப்ரவரியிலேயே அதிகரிக்க துவங்கியது. ஆனால் 2022 ல் ஒமைக்ரான் ஜனவரி மாதத்திலேயே வந்து மொத்த ரிலீஸ் பிளானையும் காலி செய்தது. படங்கள் அடுத்தடுத்து ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

வரிசையாக தள்ளிப்போன படங்கள்
தியேட்டர்கள் முழுவதுமாக மூடப்படாவிட்டாலும் ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், வலிமை என வரிசையாக பெரிய படங்கள் அனைத்தும் ரிலீசை தள்ளி வைத்தனர். அதே சமயம் நாய் சேகர், கொம்புவச்ச சிங்கம்டா, என்ன சொல்ல போகிறாய் போன்ற சிறிய படங்கள் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் தியேட்டரில் வெளியிடப்பட்டு, ஓரளவு வசூலை பார்த்து வருகின்றன.

மீண்டும் தள்ளி போகிறதா
விஷாலின் வீரமே வாகை சூடும் படம் கிறிஸ்துமஸ், பொங்கல் என அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டு, தற்போது குடியரசு தினத்திற்கு வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, மீண்டும் வீரமே வாகை சூடும் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட உள்ளதாம். கொரோனா பரவல் நிலை சரியாகட்டும் என மார்ச் 4 ம் தேதி ரிலீசை தள்ளி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இந்த படமும் தள்ளி போகிறதா
அதே போல் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4ம் தேதி, 5 மொழிகளில் ரிலீசாகும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த படமும் மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. மார்ச் மாத கடைசியில் எதற்கும் துணிந்தவன் வரும் என தகவல் பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டரில் நடந்த மாற்றம்
இருந்தாலும் சன் பிக்சர்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்த எதற்கும் துணிந்தவன் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தது. சன் பிக்சர்ஸின் ட்விட்டர் கவர் பேஜில் எதற்கும் துணிந்தவன் ரிலேஸ் தேதியுடன் இருக்கும் போஸ்டர் தான் கடந்த சில நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கவர் போஸ்டரில் இருந்து திடீரென ரிலீஸ் தேதி அகற்றப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி இல்லாத போஸ்டர் மட்டுமே தற்போது காணப்படுகிறது.

இது தான் காரணமா
இதனால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தள்ளி போவதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார்களா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். எந்த நேரத்திலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 50 சதவீதம் பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்கி வருவதால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் சன் பிக்சர்ஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

காத்திருந்த ரசிகர்கள்
கடந்த மூன்று ஆண்டுகளாக சூர்யா படங்கள் எதுவும் தியேட்டரில் ரிலீசாகவில்லை. சூரரை போற்று, ஜெய்பீம் ஆகிய இரு படங்களுமே ஓடிடி.,யில் தான் ரிலீஸ் செய்யப்பட்டன. அதனால் எதற்கும் துணிந்தவன் படத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











