Chandrayaan 3 - நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கியது.. நிலவை திரையில் இறக்கிய தமிழ் பாடல்கள் இதோ
சென்னை: Chandrayaan 3 ( சந்திரயான் 3) நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கியிருக்கிறது. அதேநேரம் பல முறை நிலவு தமிழ் பாடல்களின் மூலம் திரையிறங்கியிருக்கிறது.
தமிழ் சமூகத்துக்கும் நிலவுக்கும் ஆதியில் இருந்தே ஒரு பிணைப்பு இருக்கிறது. அதனால்தான் நிலவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறார் என்று கதையையும், ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்துகொண்டு நிலவை பார்த்து ரசிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறோம். நிலவின் மீதான ஈர்ப்பு தமிழர்களுக்கு ஆதியிலிருந்தே இருந்ததால் என்னவோ நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 1, சந்திரயான் 2, சந்திரயான் 3 ஆகிய மூன்று விண்கலங்களுக்கும் மயில்சாமி அண்ணாதுரை, முத்தையா வனிதா, வீரமுத்துவேல் என மூன்று தமிழர்கள் திட்ட இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள் போல.

சந்திரயான் 3: இதற்கு முன்பு அனுப்பப்பட்ட இரண்டு சந்திரயான் விண்கலங்களைவிட தற்போதைய சந்திரயான் 3 ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் எந்த நாடும் தடம் பதிக்காத நிலவின் தென் துருவத்தில் நேற்று தரை இறங்கியிருக்கிறது சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர். நேற்று மாலை தரையிறங்கிய லேண்டர் தனது பணிகளை தொடங்கியிருக்கிறது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரை இறங்கியிருக்கும் சூழலில் நிலவு திரை இறங்கிய தமிழ் பாடல்கள் சிலவற்றை இதில் காணலாம்.
சந்திரனை தொட்டது யார்?: நிலவுக்கு முதலில் சென்ற மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங். கடந்த 1969ஆம் ஆண்டு நிலவில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்தார் அவர். அவர் நிலவின் தரையில் காலடி எடுத்து வைத்ததை திரை பாடலில் கொண்டு வர வேண்டும் என தோன்றியது வைரமுத்துவுக்கு. கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான பாடலின் பல்லவியின் முதல் வரியையே, 'சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய் தொட்டது யார் நான்தானே' என தனது காதலியை நிலவாக உருவகப்படுத்தி காதலர்கள் அனைவரையுமே நீல் ஆம்ஸ்ட்ராங்காக மாற்றியிருப்பார்.
நிலவு பாட்டு நிலவு பாட்டு: குழந்தைக்கு சோறூட்டுவதற்கு தாய்கள் பாடிய பாடல்களில் ஒன்று 'நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா'. பல குழந்தைகள் சோறு உண்பதற்கு நிலா பாட்டு பாட வேண்டும் என்று பல காலம் அடம்பிடித்த கதையெல்லாம் உண்டு. அந்த நிலா பாட்டு என்ற வார்த்தையை மறக்காமல் கண்ணுக்குள் நிலவு படத்தில் 'நிலவு பாட்டு நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்' என்று எழுதினார் பழனிபாரதி.
அதேபோல் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம்பெற்ற இரவா பகலா என்ற பாடலை எழுதிய பழனிபாரதி நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம்தானா என கேள்வி எழுப்பி நிலவின் முகத்தை பார்த்துவிட்டோம் நிலவின் முதுகு எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தை ரசிகர்களிடம் எழுப்பினார். தற்போது சந்திராயன் 3 தரையிறங்கியிருக்கும் தென் துருவத்தை நிலவின் முதுகு என்றுகூட கொள்ளலாம்.
வெண்ணிலவே வெண்ணிலவே: நிலவை ஆராய விண்வெளிக்குத்தான் போக வேண்டுமா என்ற கேள்வி வைரமுத்துவுக்கு எழுந்திருக்கும் போல. அதனால்தான் வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா என ஒரு கோரிக்கையை வைத்தார். குறிப்பாக அந்த பாடலில் எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு என்று ஏக்கத்தோடு ஒரு கேள்வியை எழுப்பி ச்ச நிலவு அருகிலேயே இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என எண்ணத்தை எழுப்பினார் வைரமுத்து. அதுமட்டுமின்றி இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு என்று கூறி நிலவு எப்போதும் நமக்கு துணையாக இருக்கும் பசி ஆற்றும் என்பதை அழகாக உணர்த்தி சென்றிருப்பார்.

நிலவை கொண்டு வா: நிலவு பற்றி பாடல்களில் உச்சமாக வாலி படத்தில் வைரமுத்து எழுதிய 'நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை' பாடலை சொல்லலாம். ஒரு முதலிரவுக்கான சூழலில் அந்தப் பாடல் படத்தில் இடம்பெறும். எல்லோரும் வெளிச்சத்தை அணைக்க வேண்டும் என யோசித்தபொழுதில் நிலவை கொண்டு வந்து கட்டிலில் கட்டிவைத்து அந்த வெளிச்சத்தோடு இணைந்தால் என்ன என்பதை மறைமுகமாக உணர்த்தி அந்த வரிகளை கேட்பவர்களை உச்சக்கட்ட கற்பனைக்கு இழுத்து சென்றிருப்பார்.
வா வா நிலவை புடிச்சு தரவா: நிலவு எப்போதுமே ஒரு பாசிட்டிவிட்டியை பார்ப்பவர்களுக்கு கொடுக்கும்.ஏனென்றால் ஒட்டுமொத்த இரவில் ஒரே ஒரு வெளிச்சம் அந்த நிலவுதான். நான் மகான் அல்ல படத்தில் ஹீரோவின் தோழி சோகமாக இருக்க; அவருக்குள் பாசிட்டிவிட்டி ஏற்றுவதற்கான பாடல் சிச்சுவேஷனை இயக்குநர் சொல்ல; நா.முத்துக்குமார் எழுதியது 'வா வா நிலவை புடிச்சு தரவா வெள்ளி பொம்மை ஆக்கி தரவா' என்றுதான்.
ஏனென்றால் நிலவை எந்த வயதினரும் எப்போது பார்த்தாலும் ஒரு பாசிட்டிவிட்டி தோன்றும்; அது ஒரு வெள்ளி பொம்மை போன்றும் அதை பிடித்து விளையாண்டால் என்ன என்றும் தோன்றும். இப்படி பாடல்கள் மூலம் நிலவு திரை இறங்கி ரசிகர்களுடன் பழகியிருக்கிறது. தற்போது நிலவில் தரையிறங்கியிருக்கும் சந்திரயான் 3 பல விஷயங்களை ஆராய்ந்து ரசிகர்களுடனான அந்த பழக்கத்தை மேலும் நெருக்கமாக்க வேண்டும். தமிழ் ஃபில்மிபீட் சார்பாக சந்திரயான் 3க்கு வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











