நிர்பயா வழக்கு 8 வருஷம்.. பொள்ளாச்சி வழக்கு எத்தனை வருஷமோ? நடிகர் கார்த்தி நறுக்குன்னு கேள்வி!
சென்னை: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கு இன்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் நாடு முழுவதும் பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுல்தான் படத்தின் ரிலீஸ், பொன்னியின் செல்வன் ஷூட்டிங் என பிசியாக இருந்த நடிகர் கார்த்தி, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

4 மிருகங்கள்
மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய 4 மிருகங்களுக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நிர்பயாவுக்கு நீதி
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க 8 வருஷம் ஆகியுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும், பாடங்களில் இருந்து படிப்பினை பெறுவோம், பாதுகாப்பாக இருப்போம் என்றார்.

பொள்ளாச்சி வழக்கு
நடிகர் கார்த்தியின் ட்விட்டர் பதிவில், நிர்பயாவுக்கு தீர்ப்பு கிடைக்க 8 வருஷம் ஆனது. பொள்ளாச்சி வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து தண்டனை கிடைக்குமோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். ஏற்கனவே பொள்ளாச்சி வழக்கில் ஓராண்டு ஆகியுள்ளதையும் நினைவுப்படுத்தியுள்ளார்.

பீச்சில் கூட்டம்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலையில், பொதுமக்கள் பீச்சில் கூடுவதை பார்க்க முடிகிறது. இதனை தவிர்க்க வேண்டும் என கார்த்தி பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











