மனசாட்சியே இல்லையா? 241 பேர் கருகியே மரணம்.. வடிவேல் காமெடியைப் போட்டு சிரிக்கும் நெட்டிசன்கள்!
அகமதாபாத்: ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது நாட்டை மட்டுமல்லாமல் மொத்த உலகத்தையும் கவலையில் ஆழ்த்தியது. மொத்தம் 242 பேருடன் பயணப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானம், அகமதாபாத் விமான நிலையத்தின் விமான ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பிய சிறிது நேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் எமர்ஜென்சி கதவின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த பயணி விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் விமானத்தில் இருந்து வெளியே குதித்து காயங்களுடன் தப்பித்தார்.
விமானம் விழுந்து விபத்தான போது அது வெடித்துச் சிதற முக்கியமான காரணங்களில் ஒன்றாக கூறப்படுவது, அதில் இருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் லிட்டருக்கு அதிகமான எரிபொருள் தான். இந்த விமான விபத்தினால் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமில்லாமல், விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள், குடியிருப்பு பகுதிகளில் இருந்த பொதுமக்கள் என பலரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தின் மூலம் 274 பேர் உயிரிழந்தது உறுதியாகத் தெரிந்துள்ளது. விபத்தினால் படுகாயமடைந்தவர்கள் உயிரிழந்து விடக்கூடாது என பலரும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த விமான விபத்து குறித்து இணையத்தில் வருத்தத்தை, கண்ணீரை, துயரத்தை பலரும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் இணையத்தில் சிலர் இந்த விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய, விஷ்வாஸ் குமார் ரமேஷ், ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வரும் வீடியோவைப் பகிர்ந்து, அதற்கு வடிவேலுவின் நகைச்சுவை வசனத்தை பின்னூட்டமாக சேர்த்து, சிரித்து வருகிறார்கள். இந்த செயல் கண்டனங்களுக்கு உரியது.
274 உயிர்கள்: இந்த விபத்தினால் இறந்தது 274 உயிர்கள் மட்டுமல்ல, அவை 274 கனவுகள், 274 லட்சியங்கள். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் போதாது, குடும்பத்தோடு இறந்து போனவர்களுக்காக கண்ணீர் வடிப்பவர்களை எப்படித் தேற்றுவது எனத் தெரியாமல் நிற்கிறார்கள். இந்த கோர விபத்தில் ஒருவர் மட்டும் அதியசமாக உயிர் தப்பியுள்ளார் என்பது கொஞ்சம் ஆறுதல் அளித்தாலும், விபத்து ஏற்படுத்திய ரணத்தை அது குணப்படுத்தி விடாது என்றாலும், திக்கு தெரியாத இருட்டில் வானத்தில் தெரியும் ஒற்றை நட்சத்திரத்தைப் போல உள்ளது. தனது வாழ்நாள் முழுவதற்கும் அவருக்கு இந்த விபத்து என்ன மாதிரியான உளவியல் சிக்கலை ஏற்படுத்தும், அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வரப்போகிறர் என்பது குறித்தும் ஒரு சமூகமாக நாம் யோசிக்க வேண்டி உள்ளது.

மனசாட்சி இருக்கா? : இப்படியான நிலையில், இணையவாசிகள் சிலர், ரத்தம் சொட்ட சொட்ட, மரணத்தை அருகில் இருந்து பார்த்து உயிர் தப்பிய, பிஞ்சுக் குழந்தைகள் கருகிச் செத்ததற்கு சாட்சியாக இருக்கும் ஒருவர் துயரத்தின் எல்லைக்கே சென்று திரும்பியவரை பார்த்து நக்கலடிக்கிறார்கள். துயரத்தைச் சொல்லிக் கொண்டே அவர் நடந்து வரும் வீடியோவுக்கு வடிவேலுவின் நகைச்சுவை வசனத்தை பின்னூட்டமாக சேர்த்து இணையத்தில் பகிர்ந்து சிரித்து வருபவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று உள்ளதா எனக் கேட்கத் தோன்றுகிறது.
யார் அறிவிலிகள்? : வழக்கமாகவே வடக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அறிவிலிகளாக நக்கலடித்து பழகிய சில தமிழ் இணையதள பட்டாளத்திற்கு இதுவும் ஒரு நக்கல் அடிக்கும் சமாச்சாரமாக தோன்றியுள்ளது என்றால் ஆபத்தானவர்களாக மாறி நிற்பது அந்த தமிழ் இணையதளக் கூட்டம்தான். உயிர் பிழைத்து வந்த விஸ்வாஷ் குமார் ரமேஷைப் பார்த்து இவர்களுக்கு இரக்கம் இல்லை, பரிதாபம் இல்லை, அவருக்காக ஆறுதல் வார்த்தைகள் இவர்களிடத்தில் இல்லை. இவர்களுக்கு அவர் ஒரு மீம் மெட்டிரியலாக கிடைத்துவிட்டார் அவ்வளவே. கல்வியறிவோடு சேர்ந்து சமூக அறிவும் இல்லாதவர்கள் மிருகத்தை விட ஆபத்தானவர்கள் என பாபாசாகேப் அம்பேத்கர் கூறியதற்கு, இந்த தமிழ் இணையதளக் கூட்டம் நன்றாகவே பொருந்திப் போகிறது. இந்த மனசாட்சியற்ற வீடியோவுக்கு, எங்களின் ஓன் இந்தியா தமிழ் சேனலின் வீடியோ பயன்படுத்தியிருப்பதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.


Click it and Unblock the Notifications











