பெரும் அதிர்ச்சி.. பிரபல இயக்குநர் வாசுதேவன் நாயர் மரணம்.. கமல் ஹாசன் இரங்கல்
திருவனந்தபுரம்: பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான எம்.டி.வாசுதேவன்நாயரை தெரியாதவர்கள் இலக்கிய உலகில் இருக்க முடியாது. சமீபத்தில்கூட அவரது சிறுகதைகள் மனோரதங்கள் என்கிற பெயரில் ஆந்தாலஜியாக வெளியாகின. அந்தப் படங்களின் ஆரம்பத்தில் கமல் ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாசுதேவ நாயர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 91.
மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமானவர் எம்.டி.வாசுதேவன் நாயர். மாடத்து தெக்கேகாட்டு வாசுதேவன் நாயர் என்கிற இயற்பெயரை கொண்ட அவர் கடந்த 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலிருந்தே எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட அவர் வேதியியலில் பட்டம் பெற்றார். அதனையடுத்து சிறுகதைகள் எல்லாம் ஆரம்பித்த அவர் The Newyork Herald Tribune நடத்திய போட்டியில் மலையாளத்தில் சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருதினை தட்டி சென்றார்.

நாவல்களில் தரம்: சிறுகதை போட்டியில் பெற்ற வெற்றி அவருக்கு நாவல்கள் எழுதும் ஊக்கத்தையும் கொடுத்தது. அதன்படி நாலுக்கெட்டு என்ற நாவலை 23 வயதில் எழுதினார் அவர். அந்த நாவலுக்காக கேரள சாகித்ய அகாடமி விருதினையும் வென்றார். மேலும் மஞ்சு, காலம், ரண்டமூலம் போன்ற எண்ணற்ற நாவல்களை எழுதி குவித்தார். அவர் எழுதிய நாவல்கள் அனைத்துமே இலக்கிய உலகில் மட்டுமின்றி கேரளா முழுவதும் பிரபலப்படுத்தியது. இதன் காரணமாக திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் போன்ற அவதாரங்களையும் அவர் எடுத்தார்.
இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்: அந்தவகையில் அவர் மொத்தம் ஏழு படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி 54 படங்களுக்கு திரைக்கதையும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வடக்கன் வீர கத, கடவு, சதயம், பரினயம் ஆகிய நான்கு படங்களுக்கு சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான தேசிய விருதினை வென்றிருக்கிறார். மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதையும் 2005ஆம் ஆண்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக்குறைவு: அவர் எழுதிய சிறுகதைகளில் சில சமீபத்தில்கூட மனோரதங்கள் என்கிற பெயரில் ஆந்தாலஜியாக உருவானது. அதில் மம்மூட்டி, மோகன் லால், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கமல் ஹாசன் வாய்ஸ் ஓவர். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு வாசுதேவன் நாயருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கமல் ஹாசன் இரங்கல்: வாசுதேவன் நாயரின் உயிரிழப்புக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கும் கமல் ஹாசன், "ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம். மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார். மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான 'கன்யாகுமரி' படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான 'மனோரதங்கள்' வரை அந்த நட்பு தொடர்ந்தது.
துயரத்தில் ஆழ்த்தக்கூடியது: மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது. எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது. இது பேரிழப்பு. தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது. மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இருதயப்பூர்வமான அஞ்சலி" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











