இயக்குநராக மாறினார் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி.. படத்தின் பெயர் ‘வடக்கன்’
சென்னை: பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கும் முதல் படத்துக்கு வடக்கன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்கிறார்.
பரத் நடித்த 'எம்டன் மகன்', விஷ்ணு விஷால் நடித்த 'வெண்ணிலா கபடி குழு, கார்த்தி நடித்த நான் மகான் அல்ல', விஷால் நடித்த 'பாண்டிய நாடு' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. அப்புக்குட்டி நடித்து சுசீந்திரன் இயக்கி தேசிய விருது வென்ற 'அழகர்சாமியின் குதிரை' திரைப்படத்தின் கதாசிரியரும் இவரே ஆவார். இவர் இயக்குநர் சுசீந்திரனுடன் தொடர்ந்து பணியாற்றக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அவதாரம் எடுக்கும் பாஸ்கர் சக்தி
இந்நிலையில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகிறார். பாஸ்கர் சக்தி இயக்கும் முதல் படத்துக்கு 'வடக்கன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல பதிப்பாளரான டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் தயாரிக்கிறார். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜைக்கு இயக்குநர் சுசீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

படம் குறித்து வேடியப்பன்
வடக்கன் படம் குறித்தும், பாஸ்கர் சக்தி குறித்து படத்தின் தயாரிப்பாளர் வேடியப்பன் பேசுகையில், "இன்று அதிகமாக பேசப்படும் ஒரு விஷயத்தை பற்றிய கதை இது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பாஸ்கர் சக்தி சிறந்த வசனகர்த்தா விருது பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களுக்கும், பல வெற்றி படங்களுக்கும் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தில் புதுமுக நடிகர்களான குங்குமராஜ் மற்றும் வைரமாலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் தோன்றுபவர்கள் அனைவரும் மண்ணின் மக்களாக இருப்பார்கள். முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்," என்றார்.

பாஸ்கர் சக்தியின் அடுத்த பயணம் இது
படத்தின் இயக்குநர் பாஸ்கர் சக்தி கூறுகையில், "எழுத்தாளனாக எனது பணியை தொடங்ங்கினேன், பின்பு பத்திரிகையாளனாக, அதன் பிறகு மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர்களின் வசனகர்த்தாவாக, திரைப்படங்களின் வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளேன். தற்போது முதல்முறையாக ஒரு இயக்குநராக 'வடக்கன்' மூலமாக எனது திரைப் பயணத்தை தொடர்கிறேன். எனக்கு உறுதுணையாக எனது நீண்ட நாள் நண்பர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருடன் இந்த படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி.

படத்தின் ஹீரோ யார் தெரியுமா?
இருபது வருடங்களாக நாடகத் துறையில் பயிற்சி பெற்ற குங்குமராஜ் இந்த கதையின் நாயகனாக நடிக்கிறார். கதையின் நாயகியான வைரமாலா தேனி மண்ணின் மணம் சார்ந்த பெண் ஆவார், அவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு. இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு முக்கியமான விஷயத்தை இந்த படம் பேசுகிறது. படம் சிறப்பாக உருவாகி மிகுந்த வரவேற்பை பெறும் என்று கதையின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் படத்தை தொடங்கியிருக்கிறோம்" என்றார்.

வடக்கன் திரைபப்டத்தின் சிறப்பு அம்சங்கள்
வடக்கன் படத்துக்கு நேரடி ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. சமீபத்தில் வெளியான ' தலைக்கூத்தல்' திரைப்படத்தில் நேரடி ஒலிப்பதிவு செய்த ராஜேஷ் சசீந்திரன் இப்படத்திலும் பணியாற்றுகிறார்.
ஜனனி இசையமைக்க, ரமேஷ் வைத்யா இப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார். கலை இயக்குநராக காத்து மற்றும் படத்தொகுப்பாளராக நாகூரான் பணியாற்றுகிறார்கள்.


Click it and Unblock the Notifications