வாழை ஒரு ஆபாச படம்.. பஞ்சாயத்தை கூட்டிய எழுத்தாளர் சாரு நிவேதிதா.. வெளுக்கும் நெட்டிசன்கள்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் வாழை. கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை வைத்து அந்தப் படத்தை உருவாக்கியிருந்த மாரி செல்வராஜுக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர். இந்தச் சூழலில் வாழை ஒரு ஆபாச படம் என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய நான்கு படங்களுமே மிகப்பெரிய ஹிட்டடித்தன. மேலும் வணிக ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அவரது படங்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகின்றன. அதிலும் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தை திரைத்துறையினரும், ரசிகர்களும் உச்சக்கட்டமாக கொண்டாடினார்கள்.

வணிக ரீதியாகவும் வெற்றி: வாழை படத்தை மாரி செல்வராஜே தயாரித்திருந்தார். முதலில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக இருந்த வாழை தியேட்டர்களில் வெளியானது. கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கும் மேல் வாழை வசூலித்து வணிக ரீதியாகவும் ஹிட்டடித்திருக்கிறது. அதுமட்டுமின்றி விஜய் நடித்த GOAT படம் வெளியான பிறகும்கூட வாழை படம் திரையிடப்பட்டிருக்கும் சில தியேட்டர்களில் இன்னமும் ஹவுஸ் ஃபுல்லாக இருப்பது கவனிக்கத்தக்கது.
சாரு நிவேதிதா விமர்சனம்: இப்படி வாழை படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டிருக்கும் சூழலில் எழுத்தாளர் சாரு நிவேதிதா படத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் தனது வலைதள பக்கத்தில், "தாய்லாந்தில் லைவ் ஷோ என்கிற பெயரில் ஆணும் பெண்னும் உடலுறவு கொள்வார்கள். அதனை பலரும் கண்டு களிப்பார்கள். அப்படித்தான் வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனணைந்தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கின்றன. தாய்லாந்தில் நடக்கும் லைவ் ஷோவின் சாஃப்ட் வெர்ஷனாக வாழை இருக்கிறது.
பச்சை பொய்: சிவனைந்தன் எட்டாம் வகுப்பு மாணவன். வயது பதின்மூன்று. டீச்சர் பூங்கொடிக்கு வயது இருபத்து இரண்டு இருக்கலாம். பூங்கொடி ஒரு காட்சியில் பாவாடை தாவணியோடு வருகிறார். டீச்சரும் சிவனணைந்தானும் வரும் காட்சிகள் அனைத்திலுமே பாலியல் சமிக்ஞைகள் படு தீவிரமாக உணர்த்தப்படுகின்றன. என்னைப் போல் அது புரியாத அசடுகளுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெள்ளத் தெளிவாக தன் இசையின் மூலம் அந்தப் பாலியல் சமிக்ஞைகளைப் புரிய வைத்து விடுகிறார். இயக்குனர் சூசகமாகச் சொல்ல நினைப்பதை இசையமைப்பாளர் நம் கண் முன்னே தூலமாக எடுத்துக் காண்பித்து விடுகிறார். நம் செவிகள் கேட்பதை கண்கள் புரிந்து கொள்கின்றன.
டீச்சரின் கர்ச்சீஃபை முகர்ந்து பார்க்கும் சிவனணைந்தான் பூங்கொடி என்ற பெயர் வரும் சினிமா பாடல்களில் தன்னை மறக்கிறான். இயக்குநர் மாரி செல்வராஜ் மாற்று சினிமா ஆர்வலர் என்பதால் அந்தக் காட்சியில் டீச்சரும் மாணவனும் பாடும் ஆடும் கனவுக் காட்சிகள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். ஆனால் சந்தோஷ் நாராயணனுக்கு அம்மாதிரி தடையேதும் இல்லை. அவர் செவிப்புலனுக்காக வேலை செய்பவர்" என குறிப்பிட்டு மேற்கொண்டு பல விஷயங்களை எழுதியிருக்கிறார்.
ஆபாச படம்: முக்கியமாக இந்தப் படம் ஒரு ஆபாச படம்தான் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார் சாரு நிவேதிதா. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், சாரு நிவேதிதா ஒட்டுமொத்த வன்மத்தையும் கக்கிவிட்டார். பூங்கொடி டீச்சருக்கும், சிவனணைந்தானுக்கும் இடையே இருந்த உறவு எந்தவித பாலியல் சமிக்ஞைகளையும் தங்களுக்கு காண்பிக்கவில்லை. அந்த எண்ணவோட்டத்தோடு சாரு பார்த்திருப்பதால் அவருக்கு அப்படி தோனியிருக்கும்போல என சொல்லி சாரு நிவேதிதாவை வெளுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











