Vaazhai: வாழை படத்தின் கதை என்னுடையது.. எழுத்தாளர் பேட்டியால் மாரி செல்வராஜ்க்கு சிக்கல்?
சென்னை: கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் புரோமோசனில், இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார். மேலும் படம் பார்த்த இயக்குநர்கள் தொடங்கி பொது மக்கள் வரை பலருமே படத்தைப் பாராட்டினர். மேலும் இயக்குநர்கள், நடிகர்கள் பொதுமக்கள் என பலரும் அழுதனர்.

படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற படமாக மாறியுள்ளது. படத்திற்கு பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இப்போதுவரை ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். படத்தில் நடித்த அனைவரும் ரசிகர்களிடம் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். பல ரசிகர்கள் படம் தங்களது மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் மாரி செல்வராஜ் பல இடங்களில் பேசுகையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வேம்பு கதாபாத்திரம், எனது சிறு வயதில் வாழைத் தார் சுமக்கும் வேலைக்குச் சென்று விபத்தில் இறந்து போன எனது அக்காவின் கதாபாத்திரம் என குறிப்பிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல், எனது வாழ்வின் மிகப்பெரிய கண்ணீர்தான் இந்தப் படம் எனவும் படம் தொடங்குவதற்கு முன்னர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டிருந்தார்.

பாலா: வாழை படத்தினைப் பார்த்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். மேலும் கலங்கிய கண்களுடன் மாரி செல்வராஜின் கரங்களை வெகு நேரம் பற்றிக் கொண்டு, அதன் பின்னர் மாரி செல்வராஜிடம் ஒரே ஒரு வார்த்தை மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அதேபோல், நடிகர் தங்கதுரை படத்தை பார்த்ததும் வெளியே வந்து மாரி செல்வராஜை ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதார்.

க்ளைமேக்ஸ்: படம் முழுவதும் நகைச்சுவை காட்சிகளாலும் உண்மைக்கு நெருக்கமான காட்சிகளாலும் ரசிகர்களை தனடு கட்டுக்குள் வைத்திருந்த மாரி செல்வராஜ், படத்தின் க்ளைமேக்ஸ் முடிந்து, படத்தின் இறுதி டைட்டில் கார்ட் முடியும் வரை அனைவரையும் இருக்கையிலேயே அமரவைத்திருந்தார். நீண்ட வருடத்திற்குப் பின்னர் இப்படியான ஒரு படம் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளது என பலரும் பாராட்டினர்.

எனது கதை: இவ்வாறு பலரது பாராட்டைப் பெற்ற வாழை படத்தின் கதை தான் எழுதிய சிறுகதையை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர், சோ. தர்மன் கூறியுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், " நான் அதிகம் சினிமா பார்ப்பது இல்லை. எப்போதாவதுதான் பார்ப்பேன். சமீபத்தில் வெளியான வாழை படம் பார்த்த எனது நண்பர்கள், நான் எழுதிய வாழையடி என்ற சிறுகதையைப் போல் உள்ளதாக கூறினர். அதன் பின்னர் நான் வாழை படத்தைப் பார்த்தேன். 10 ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கதைக்கு "வாழையடி _ _ _" என பெயர் வைத்தேன். அதற்கு காரணம் சிறுவர்கள் பல தலைமுறைகளாக இந்த வேலையைச் செய்து வருகின்றனர் என்பதைக் குறிக்கும் வகையில்தான் அவ்வாறு பெயர் வைத்தேன். நான் அச்சு ஊடகத்தில் எழுதிய கதையைத்தான், இப்போது காட்சி ஊடகமாக மாற்றி எடுத்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











