மலையாள பொறுக்கிகளா? கேரளா ஒதுக்கியதால் பழிவாங்கலா? ஜெயமோகனை விளாசிய கேரள எழுத்தாளர்!
சென்னை: மலையாளம் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை, மலையாள பொறுக்கிகளின் கூத்தாட்டம் என்று எழுத்தாளர் ஜெயமோகன் மோசமாக விமர்சித்திருந்தார். இதை கடுமையாக கண்டித்துள்ள கேரள எழுத்தாளர் உண்ணி ஆர், குடிப்பவர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்ற பரிசுத்த வாதம் பார்ப்பனியத்தின் வாதம் என்றும், உங்களுக்குத் திரைக்கதை எழுதத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு கேரளா ஒதுக்கியதால் பழிவாங்கலா என கடுமையாக விமர்சித்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன் மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து எழுதிய கட்டுரையில், மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது. சுற்றுலாமையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடிகுடிகுடி அவ்வளவுதான்.

மலையாள பொறுக்கிகள்: குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும் இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள் என்று ஜெயமோகன் மோசமான வார்த்தையால் பதிவிட்டு இருந்தார்.
பார்ப்பனிய உணர்வு: மலையாளி குறித்து கடுமையான வார்த்தையால் விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனை கண்டித்து, மலையாள எழுத்தாளர் உண்ணி ஆர் மலையாள மனோரமாவில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜெயமோகன் எழுதிய குறிப்பை நடித்தேன். அதில் அவ்வளவு விஷமத்தனம் உள்ளது. குடிப்பவர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்ற வாதம் பார்ப்பனியத்தின் வாதமே. மலையாளிகளில் கள்ளிறக்கும் தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆண் பெண் பேதமின்றி, மது அருந்துபவர்களும் இருக்கிறார்கள். ஒதுக்கப்பட்டவர்களின் நாகரிகமில்லாத களியாட்டமாகவே இதைப் பார்க்கிறார்கள். இந்த பார்ப்பனிய உணர்வுதான் ஜெயமோகன் வாதத்தின் பின் இருக்கும் உண்மை.
மனிதாபிமானம் தெரியவில்லையா: மஞ்சும்மல் பாய்ஸ் படம் நண்பர்களின் அடித்தட்டு வாழ்க்கை வாழ்பவர்களின் கதை. படத்தில் அவர்கள் குடிகாரர்கள் என்றும் பொறுக்கிகள் என்றும் காட்டினாலும், ஆபத்தான கட்டத்தில் தனது நண்பனைக் காப்பாற்றிய மனிதாபிமானத்தை இந்த ஆசாமி கண்ணில் ஏன் படவில்லை. இயற்கையின் சீற்றத்தால், பிரச்சனை ஏற்பட்ட போது, மலையாளிகளும், தமிழரும் பரஸ்பரம் கைநீட்டித் தொட்டுக் கொண்டார்கள். அவர்களில் குடிகாரர்களும், விபச்சாரிகளும் இருந்தார்கள்.
பழிவாங்கலா: கேரளக் கடற்கரைகளில் மாலை நேரங்களில் செல்லப் பயமாக இருக்கிறதா? உங்களுக்குள் இருக்கும் கிழவனுக்கு இளைஞர்கள் மேல் ஏன் இத்தனை வெறுப்பு? உங்களைப் போல கீழ்மைக்கு அடிமையாகாமல் மலையாளி இளைஞர்கள் தங்களை நிரந்தரமாக நவீனப்படுத்திக் கொள்வதாலா? கேரளத்துக்கு கதை எழுத வந்த உங்களுக்குத் திரைக்கதை எழுதத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு தவிர்த்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கான பழிவாங்குதலா இந்த வசை மாரி?
பொய்யை சொன்ன கேரளா ஸ்டோரி: உங்களைப் போல அதிகாரத் திமிருடன் இருப்பவர்களுக்கு அம்பேத்கர் சொன்ன 'மைத்ரி' என்னவென்று புரியாது. பெரியாரைப் புரியாது. நாளை நீங்கள் கேரளத்தின் கவர்னர் ஆனாலும், நாங்கள் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கேரளத்தைப் பற்றி மிகப் பெரிய பொய்களைச் சொன்ன கேரளா ஸ்டோரிஸ் என்ற சினிமாவின் தொடர்ச்சியாகவே ஜெயமோகனின் பதிவினை நான் பார்க்கிறேன் என்று கேரள எழுத்தாளர் உண்ணி ஆர், ஜெயமோகனை விளாசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











