தப்பு தப்பான டேட்டா.. CM விஜய்க்கு ஆதரவாக தெலுங்கில் பேசிய மாஸ்டர் மகேந்திரனை விடாமல் விளாசும் நெட்டிசன்ஸ்
சென்னை: நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கடந்த வாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக கருத்து சொல்வதாக கூறி, பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. குறிப்பாக திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் பலரும் மகேந்திரனை இணையத்தில் காட்டமாக விமர்சித்தனர். மேலும், அவரது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக மகேந்திரன் விளக்கம் தெரிவித்து வீடியோவும் வெளியிட்டார். இது மட்டும் இல்லாமல், அவரது பேட்டியில் முதலமைச்சர் விஜய்யை கேள்வி கேட்காதீர்கள் என்று பேசி இருந்தது தான் பெரிய அளவில் சர்ச்சையாக மாறியது.
இப்படி இருக்கையில் மகேந்திரன் தனது படத்தின் புரோமோஷனுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அப்போது அவரை நோக்கி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக சமீபத்திய அவரது சர்ச்சை குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், கடந்த 75 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் தான் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் கடந்த 75 ஆண்டுகளில் அவர்களால் செய்ய முடியாததை கடந்த 35 நாட்களாக முதலமைச்சராக பணியாற்றி வரும் விஜய்யைச் செய்யச் சொல்லி கேள்வி எழுப்புவது நியாயமற்றது.

கால அவகாசம்: திருமணம் செய்து வைத்தால் குழந்தை பிறக்க 9 மாதங்கள் ஆகும் தானே, அப்படி இருக்கும் போது அதற்கான கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் தானே. அதை விட்டுவிட்டு நாளைக்கே குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது நடக்குமா?" என்று பேசி உள்ளார்.
வரலாறு தெரியாத மகேந்திரன்: இவரது இந்த பேச்சுக்கும் இணையவாசிகள் அவரை காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியா சுதந்திரம் பெற்றது, 1947 அதிலிருந்து கணக்குப் பார்த்தால் 79 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் திமுகவும் அதிமுகவும் 75 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக பொய் கூறுகிறார். இது மட்டும் இல்லாமல், திமுக கட்சி தொடங்கப்பட்டதே 1967ஆம் ஆண்டு தான். அப்படிப் பார்த்தால் மகேந்திரன் எதற்காக இப்படி வரலாறு தெரியாமல் மிகவும் பொய்யான கருத்துக்களை பேசி, முதலமைச்சர் விஜய்க்கும் தவெகவுக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலரோ மிகவும் காட்டமாகவும் விமர்சித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications