"கலாபக் காதலி" அக்ஷயாவின் புதிய முகம்.. இயக்குநராக விஸ்வரூபம் எடுக்கும் யாளி
கலாபக்காதன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை அக்ஷயா, 'யாளி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
Recommended Video

சென்னை: பெண்கள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'யாளி' படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகை அக்ஷயா.
யாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் பி.வாசு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போஸ்டரை வெளியிட்டார்.
இப்படத்தை இயக்கும் அக்ஷயா எல்லோருக்கும் தெரிந்த முகம்.. பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்த முகத்தை தரிசிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.

மீண்டும் வரும் அக்ஷயா
ஆர்யா நடிப்பில் வெளியான ‘கலாபக் காதலன்' படத்தில் அவரது மனைவி ரேணுகா மேனனின் தங்கையாக நடித்தவர் அக்ஷயா. ஒரு சில படங்களில் ஹீரேயினாகவும் நடித்திருந்தார். திருமணத்துக்கு பின்னர் நடிக்காமல் இருந்தார். இப்போது இவரது கணவர் பாலச்சந்தர் தனது ஏபி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாக்கும் படம்தான் யாளி.

திரில்லர் கதை
வாழ்த்துகள் அக்ஷயா.. அது என்ன யாளி என்று ஒன்இந்தியா தமிழ் சார்பாக அவரிடமே கேட்டோம்.. பெண்கள் கடத்தலை மையமாக வைத்து, ரொமான்டிக் த்ரில்லர் ஜானர் வகையில் யாளி படத்தை எடுத்திருப்பதாகக் கூறினார் அக்ஷயா.

ஜனனி கதாபாத்திரம்
மேலும் அவர் கூறியதாவது, "இது ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம். ஜனனி என்ற பெண்ணை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் மையக்கரு. படத்தில் பெண்கள் ஒவ்வொருவராக கடத்தப்படுவார்கள். அவர்கள் யார் என்பது தெரியாது. ஜனனியையும் சிலர் பின்தொடர்வார்கள். ஜனனியை அவர்கள் கடத்தினார்களா? இல்லை அவள் தப்பித்தாலா? என்பதை த்ரில்லிங்காக காட்சிபடுத்தியுள்ளோம். பெண்களை கொடுமைப்படுத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்ன என்பதை க்ளைமாக்ஸ் காட்சி சொல்லும்.

யாளியின் வடிவம்
இந்த படத்தில் தமன் ஹீரோவை நடித்திருக்கிறார். அவருக்கும் எனக்குமான காதல் காட்சிகளும் படத்தில் உண்டு. சென்னை, பாண்டிச்சேரி, புனே, மலேசியா என பல இடங்களில் படத்தை காட்சிபடுத்தியுள்ளோம். யாளி என்பது இந்து கோயில்களில் இருக்கும் ஒரு ஆக்ரோஷமான காவல் தெய்வம். சிங்க முகம், யானை தந்தம், குதிரை உடல் என அதன் வடிவம் இருக்கும். இந்த படத்தின் கதாநாயகி ஜனனி, இந்த யாளி போன்றவள் என்பதால் தான் இந்த தலைப்பை வைத்தோம். முழுக்க முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது.

சிரமப்பட்ட அக்ஷயா
ஜூன் மாதத்தில் இசை வெளியீடும், ஜூலை மாதத்தில் பட வெளியீடும் இருக்கும். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சினிமாவில் சாதிப்பது அவ்வளவு எளிதல்ல. மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளேன். நன்றி" என்றார் அக்ஷயா.
நாங்களும் பார்த்து ரசிக்க காத்திருக்கிறோம் அக்ஷயா. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications