ஆச்சரியமும் டர்னிங் பாயின்ட்டும் யாஷிகாதான்... இயக்குனர் தகவல்
சென்னை: ராஜபீமா படத்தில் ஆச்சரியமும் திருப்பமும் தரும் கேரக்டரில் யாஷிகா ஆனந்த் நடிக்கிறார் என்று அதன் இயக்குனர் கூறினார்.
ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகும் படம் ராஜபீமா. சுரபி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாசர், கே.எஸ்.ரவிகுமார், சாயாஷி ஷிண்டே, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சைமன் கே கிங் இசை அமைக்கிறார்.
ஒவியா, கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி, கமர்சியல் என வெரைட்டியாக இருந்த டிரைலருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.

யாஷிகா ஆனந்த்
இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்தும் நடிக்கிறார். அவர் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. இதுபற்றி இயக்குனர் நரேஷ் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருப்பங்கள்
அவர் கூறும்போது, யாஷிகா, ஜர்னலிஸ்டாக வருகிறார். அவரது கேரக்டர் அதிகத் திருப்பங்கள் கொண்டதாக, கிளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சிகளில் திருப்பங்கள் ஏற்படுத்துவதாகவும் ஆச்சர்யம் தருவதாகவும் இருக்கும்.

பொருத்தமாக
இதன் திரைக்கதையை எழுதும்போது ஒவ்வொரு கேரக்டரும் வலிமையானதாக, கச்சிதமானதாக உருவாக்கப்பட்டது. அதிலும் இந்த கேரக்டரை எழுதியபோது பல்வேறு நடிகர்களை முயற்சித்தோம். பிறகு யாஷிகா பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்தோம். அவரும் சிறப்பான நடிப்பை தந்து இந்த கேரக்டருக்கு உயிரூட்டி இருக்கிறார் என்றார்.

தந்தம் கடத்தல்
யானைக்கும் ஹீரோவுக்குமான உறவை, அன்பை சொல்லும் படம்தான் இது என்றாலும் படத்தின் டிரைலரில், யானை தந்த கடத்தலை காட்டியிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

பின்னணி இசை
இதுபற்றி கேட்டபோது, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் திருப்பங்கள் கொண்டதாக படம் இருக்கும். இப்போதைக்கு இதை மட்டுமே சொல்ல முடியும். படம் அனைத்துவிதமான ரசிகர்களையும் கவர்ந்திழுப்பதாக இருக்கும் என்றார். படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











