Year Ender 2024: சண்டைனா சட்ட கிழியத்தான் செய்யும்.. இந்த ஆண்டு பிரபலங்கள் போட்ட சண்டை ஒரு பார்வை!
சென்னை: 2024 ஆண்டு முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், அதிக வசூலை அள்ளிய படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த பாடல்கள் என இந்த ஆண்டு எவை எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது என்பதை ஆண்டின் இறுதியில் திரும்பி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு பிரபலங்கள் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுதிப்பில் பார்க்கலாம்.
இந்த ஆண்டின் மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்பட்டது நயன்தாரா, தனுஷ் இடையேயான மோதல் தான். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் பிரபல ஓடிடி தளத்தில் 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற பெயரில் ஆவணப்படமாக நயன்தாராவின் பிறந்த நாளன்று வெளியானது.திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அந்த வீடியோ வெளியாமல் இருந்தது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் நயன்தாரா திடீரென தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ வெளியாகாததற்கு தனுஷ் தான் காரணம் என்றார். மேலும் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்காக தனுஷிடம் பலமுறை என்ஓசி கேட்டு காத்திருந்தோம். ஆனால் அவர் அனுமதி தரவில்லை. மேலும் அந்த அவணப்படத்தில் படத்தின் மூன்று நிமிட காட்சியை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாயை நஷ்ட ஈடு கேட்டதாக கூறியிருந்தார்.

நஷ்ட ஈடு வழக்கு: நயன்தாரா அறிக்கை வெளியிட்டதையடுத்து, பலரும் தனுஷ், இப்படி நடந்து கொள்ளலாமா? என கருத்து தெரிவித்து வந்தனர். அதன் பின், நயன்தாரா இந்த ஆவண படத்தை பணம் வாங்காமல் வெளியிட்டாரா என்றும், திருமண வீடியோவை பல கோடிக்கு விற்றவர் தான் நயன்தாரா என்றும் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து பலரும் தனுஷின் ஆதரவாளராக மாறினர். இதை எடுத்து நடிகர் தனுஷ் உயர் நீதிமன்றத்தில் நயன்தாராவின் ஆவணப்படத்தில், நான் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதற்கு நயன்தாரா எந்த விதமான அனுமதியும் பெறவில்லை எனவே தனக்கு பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் விரைவில் பதில் அளிக்க விக்னேஷ் சிவனுக்கு சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து: நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் ஜெயம் ரவி, மனைவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டு விட்டு பிரிந்தார். இதையடுத்து, மனைவி ஆர்த்தி, கணவரை சந்தித்து பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இருவரும் சமரச தீர்வு மையத்தில் சந்தித்து பேச வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இருவரும் நேரில் ஆஜராகி சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் விவகாரம்:இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, நிரப்பமுடியாத இடைவெளி காரணமாக கணவரை பிரிவதாக அறிவித்தார். இது இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து, அதே நாளில், ஏ ஆர் ரகுமானின் இசை குழுவில் ஒருவராக பணியாற்றி வரும் மோகினி டேவும் தன்னுடைய கணவர் மார்க் ஹார்ட்சுச்சை பிரிந்து விட்டதாக அறிவித்து இருந்தார். இதை தொடர்பு படுத்தி ஏ.ஆர். ரஹ்மான் மீது அவதூறு பரப்பும் விதமாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்தன. இது உண்மைக்கு புறம்பானது என்று அவரது மகன் அமீன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் விளக்கம் கொடுத்தார்.இதைத்தொடர்ந்து, பொய்ச் செய்திகளையும், வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் 24 மணி நேரத்தில் நீக்காவிட்டால் அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ் வெளியிட்டு இருந்தார்.

கொந்தளித்த சோஷியல் மீடியா: தொகுப்பாளினி மணிமேகலை விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 5வது சீசனில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதில், குக்காக இருந்த பிரியங்கா, அவருடைய வேலையை செய்யாமல், என்னுடைய வேலையில் மூக்கை நுழைத்து வருகிறார். இதனால், வந்த சண்டை குறித்து நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் முறையிட்டால், அவர் பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்கும்படி கூறியதால், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறியிருந்தார். இவர்களின் சண்டை விவகாரம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி சில வாரங்களாக சோசியல் மீடியாவே கொந்தளித்தது.



Click it and Unblock the Notifications











