Year Ender 2024: கொண்டாடப்பட வேண்டிய கலைஞன்.. குணச்சித்திர கதாபாத்திரங்களில் சம்பவம் செய்யும் சேத்தன்!
சென்னை: தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகர்கள் இருந்தாலும், திறமையை வெளிக்கொண்டுவரும் அளவுக்கு சிறப்பான கதாபாத்திரங்கள் அமையும்போதுதான், அந்த நடிகர்களின் திறமை வெளியே தெரிகின்றது. அதேபோல், பல திறமையான நடிகர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போனதால், திறமையை வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் கடைசியில், சினிமாவில் இருந்தே வெளியேறியுள்ளார்கள். அதேபோல் சின்னத்திரையில் தொடர்களில் நடித்த நடிகர்கள், அதன் பின்னர் வெள்ளித்திரையில் தங்களுக்கு கிடைக்கும், கதாபாத்திரங்கள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தி, தனக்கு நிகர் தான் மட்டுமே என நிரூபித்துள்ளார்கள்.
அப்படி தனது அசாத்திய நடிப்பினால், இந்த ஆண்டில் மக்கள் மனதில் இடம் பிடித்த, பெரும் பாராட்டுக்கு தகுதி வாய்ந்த கலைஞன் தான், சேத்தன். பல் ஆண்டுகளாக சின்னத்திரையில், தொடர்கள் பார்த்து வரும் ரசிகர்களுக்கு சேத்தன் குறித்து நன்கு தெரியும். சுமார், 30 ஆண்டுகளாக ஊடக வாழ்க்கையில் இருக்கும் சேத்தனுக்கு இந்த ஆண்டு ஜாக் பாட் ஆண்டாக அமைந்துள்ளது என்றே கூறவேண்டும்.

ஒரு நடிகருக்கு மனநிறைவான விஷயமே, அவரது நடிப்பினால், தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பதுதான். அப்படி சேத்தன் தான் ஏற்று நடித்து, இந்த ஆண்டு வெளியான படங்கள் மற்றும் வெப் சீரிஸில் செஞ்சுரி அடித்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் விடுதலை பாகம் 2 படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. இந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள, கோபம் கொண்ட காவல் அதிகாரி கதாபாத்திரத்தைப் பார்க்கும்போது, ரசிகர்களுக்கே கோபம் உச்சத்திற்கு ஏறுகின்றது. அந்த அளவுக்கு தனது வசன உச்சரிப்பு, உடல் மொழி மூலம் ஸ்கோர் செய்கின்றார். ஒரு காட்சியில் அவர் இருக்கின்றார் என்றாலே, தனது திமிரான உடல் மொழியை வெளிக்காட்டிக் கொண்டே உள்ளார்.

கர்வம்: அதேபோல் இவரது நடிப்பில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்ற படம் ஜமா. இந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்த தாண்டவம் வாத்தியார் கதாபாத்திரம், அந்த கதாபாத்திரத்திற்கான, தான் தான் என்ற கர்வம், அகங்காரம், பகை, பழிவாங்கும் குணம் ஆகியவற்றை ரசிகர்களுக்கு கடத்தும் அளவுக்கு அட்டகாசமாக நடித்திருப்பார். அதேநேரத்தில் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பார். க்ளைமேக்ஸில், குற்ற உணர்ச்சியோடு, கல்யாணம் கதாபாத்திரத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, தனது உயிரைவிடும் காட்சியில் ரசிகர்களுக்கு கண்ணீரையே வரவழைத்தார் சேத்தன்.

வசன உச்சரிப்பு: படங்கள் மட்டும் இல்லாமல், இவர் நடித்து ஒரு வெப் சீரிஸ் வெளியாகியது. தலைவெட்டியான் பாளையம் இணையத் தொடரில் இவர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர், இந்நாள் பஞ்சாயத்து தலைவரின் கணவர். மீனாட்சி சுந்தரம் என்ற கதாபாத்திரம், இன்னும் நாகரிகமடையாத, பிற்போக்குதனங்களில் மூழ்கி இருக்கின்ற, அதை நியாயப்படுத்துகின்ற கதாபாத்திரம். தொடர் முழுவதுமே நகைச்சுவையாக அதேநேரத்தில் நக்கல் நையாண்டியோடு கலந்த கூர்மையான வசனங்களை போகின்ற போக்கில் பேசுவதும், அதற்கேற்ற உடல் மொழியும் என வியப்பில் ஆழ்த்தும் நடிப்பினை வெளிபடுத்தியுள்ளார் சேத்தன்.

அங்கீகாரம்: இப்படி இந்த ஆண்டில் சேத்தன் நடிப்பில் வெளியான தலைவெட்டியான் பாளையம், ஜமா, விடுதலை பாகம் 2 ஆகியவற்றில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார் சேத்தன். இப்படி தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசமான நடிப்பினை அழுத்தம் திருத்தமாக வழங்கும் சேத்தன் தமிழ் சினிமாவால் என்றைக்கும் கொண்டாடப்பட வேண்டிய கலைஞன். ஆனால் தமிழ் சினிமாவில் சேத்தன் மட்டுமல்ல பல குணச்சித்தர நடிகர்களுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் போதுமானதாக இல்லை. இது மாறும் என்ற நம்பிக்கையில், சேத்தனுக்கு இந்த ஆண்டைப் போல் அடுத்த ஆண்டும் சிறப்பாக அமைய, ஃபிலிமி பீட் சார்பாக வாழ்த்துகள்.



Click it and Unblock the Notifications











