'கொலையில் என்னடா கௌரவம்? கொதிக்கும் ‘என்று தணியும்’ இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார்
தமிழக வரலாற்றில் ஒரு கறை படிந்த சம்பவமான கீழவெண்மணி கொலைகள் குறித்து இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் ‘ராமையாவின் குடிசை' என்ற ஆவணப்படம் எடுத்தவர் பாரதி கிருஷ்ணகுமார். 37 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாதிக்கொடுமை கொலைகளின் பின்னணியையும் கோரத்தையும் ஆவணப்படமாக பதிவு செய்த இவர், சாதி மாறி காதலித்தவர்கள் கொலை செய்யப்படுவது பற்றி தற்போதுதிரைப்படமாக எடுத்து வருகிறார்.
காதலித்ததற்காக பெற்றோரே பெற்ற மகளுக்கு நஞ்சு கொடுத்துக் கொல்லும் கொடூரம் உலகில் வேறு எங்கும் நடக்குமா? என்று கேட்கும் அவர் கொலையில் ஏது கௌரவம் என்றும் கோபத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு பிரபல இதழுக்கு பாரதி கிருஷ்ணகுமார் அளித்துள்ள பேட்டி

சாதி மாறி காதலிப்பது குற்றமா?
''தமிழில் காதலைப் பற்றிப் பேசிய படங்களைவிட சாதி, கௌரவக் கொலைகள் பற்றிப் பேசிய படங்கள் மிக மிகக் குறைவு. சாதிப் பெருமை பேசும் படங்களை, சாதி பற்றி பேசும் படங்களாகக் கருத முடியாது; கருதவும் கூடாது. அவை பிணங்களைப் போற்றியவர்கள் எடுத்த படங்கள். காதலித்ததற்காக பெற்றோரே பெற்ற மகளுக்கு நஞ்சு கொடுத்துக் கொல்லும் கொடூரம் உலகில் வேறு எங்கும் நடக்குமா? உடன் பிறந்த அண்ணன்கள் கூடி தங்கையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்யும் பயங்கரம் நிகழுமா? இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இது நடக்கிறது.

கௌரவக் கொலைகள்
'கௌரவக் கொலை' என்ற சொல்லே என்னை ஆத்திரமூட்டுகிறது. 'கொலையில் என்னடா கௌரவம்?' எனக் கோபம் வருகிறது. இது கௌரவக் கொலைகளை எதிர்க்கிற படம் மட்டுமல்ல, யார் எதிர்க்க வேண்டும், யாரோடு இணைந்து எதிர்க்க வேண்டும், எப்படி எதிர்க்க வேண்டும் என்றும் பேசுகிற படம்.

சாதியை துறக்கவேண்டும்
மனிதர்களுக்கு சாதி என ஒன்று இல்லை என்பது, என் அனுபவ அறிவு சொல்கிற உண்மை. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என அரசால், ஆதிக்கச் சக்திகளால் வகைப்படுத்தப்பட்ட மக்கள், தங்கள் சாதிப் பகைமைகளை மறந்து, தேவையானால் சாதிகளையேகூடத் துறந்து ஒன்றுசேர வேண்டும் என்கிற மாபெரும் கனவின் மிகச் சிறிய வெளிப்பாடே என்று தணியும்?'''

யுவன் மயில்சாமி
இந்தப்படத்தில் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி ஹீரோவாக நடித்துள்ளார். சந்தனா, ஜீவிதா என்ற இரண்டு கதாநாயகிகளும் நடித்துள்ளதாக கூறும் பாரதி கிருஷ்ணகுமார், எல்லா அநீதிகளுக்கும் சட்டத்தின் வழியே நீதியை நிலைநாட்டிக் கொள்ள இயலாத ஒரு சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பழிவாங்கும் உரிமை பிறப்புரிமையாகிவிடுகிறது என்று தனது கோபத்தை இந்த படத்தில் பதிவு செய்துள்ளார்.

இளைஞனின் கோபம்
பழிவாங்குதல் தவறானது என உபதேசிக்க எல்லோராலும் முடியும். பழிவாங்குதல் வேறு; நீதியை நிலைநாட்டுதல் வேறு. கண்ணகி, மதுரையை எரித்தது பழிவாங்கும் உணர்ச்சியால் அல்ல; தனது நீதியை உலகுக்கு உணர்த்துவதற்காக. பாண்டியன் இறந்துபோகவேண்டும் என்பது கண்ணகியின் விருப்பம் அல்ல. தன் கணவன் கள்வன் அல்ல என உலகத்துக்குச் சொல்வதே அவளது நோக்கம். அப்படித் தனது நீதியை தனது அறிவினால் உலகத்துக்கு உணர்த்தும் ஏழைக் கிராமத்து இளைஞன் ஒருவனின் தணியாதக் கோபம்தான் என் படத்தின் கதை என்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.

உண்மைகளின் கதை
'தனது சாதிப் பெருமை தவிர வேறு எதையும் கொண்டாடத் தெரியாத ஒருவரால், இரண்டு மனங்களில் துளிர்க்கும் அன்பை ஒருபோதும் அறிந்துகொள்ளவோ, அங்கீகரிக்கவோ முடியாது என்று கூறும் பாரதி கிருஷ்ண குமார் இந்தப்படம் தர்மபுரி திவ்யா இளவரசனைப் பற்றிய உண்மைக்கதையல்ல... இது உண்மைகளின் கதை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











