'எவன்'... அம்மாவையும் மகனையும் சேர்க்க காதலி படும் பாடு!
வழக்கமாக காதலன் - காதலியைச் சேர்ந்து வைக்க நண்பர்கள் பாடுபடுவதுபோலத்தான் கதைகள் வரும் தமிழ் சினிமாவில். ஆனால் முதல் முறையாக பிரிந்து போன தாயையும் மகனையும் இணைக்கும் காதலியின் முயற்சியைப் படமாக்குகிறார்கள்.
படத்துக்குப் பெயர் எவன். புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்திதான் இந்தப் படத்தின் ஹீரோ.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், அஜீத், விஜய், சிம்பு என தலைமுறைகள் தாண்டி ஹீரோக்களுக்குப் பாடல் எழுதியவர் புலவர் புலமைப்பித்தன். அமரர் எம்ஜிஆருக்கு மிக நெருக்கமான கவிஞர்களில் ஒருவர். அவரது ஆட்சியில் அரசவைப் புலவராகவும் இருந்தவர். இவருடைய பேரன்தான் திலீபன் புகழேந்தி.

தீப்தி மானே
பைக் ரேஸ் வீரரான திலீபன் புகழேந்தி நடிகராக அறிமுகமாகும் படத்துக்கு எவன் என்று தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தீப்தி மானே என்பவர் நடித்துள்ளார்.
படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கே.எம்.துரைமுருகன். இவர் தயா, கருப்பசாமி குத்தகைகாரர், கோலிசோடா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் இயக்கும் புதிய படம் இது.

எவன்.. ஏன்?
இப்படம் குறித்து அவர் கூறும்போது, "ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் எவன் என்ற சொல் கண்டிப்பாக இருக்கும். அதேபோல், இந்த படத்திலும் ‘எவன்' என்ற சொல் இருந்துகொண்டே இருக்கும். அதனாலேயே இந்த படத்திற்கு அந்தத் தலைப்பை வைத்திருக்கிறோம்.

அம்மா - மகன்
வழக்கமாக காதலனும், காதலியும் சேருவதற்குதான் பெரிய போராட்டமே நடக்கும். ஆனால், இங்கே அம்மாவும் மகனும் சேருவதற்கு காதலி படும்பாடே இந்த படத்தோட கதைக்களம். இந்த படம் காதலிப்பவர்களுக்கு, அம்மாவை பிடிக்கிற எல்லோருக்கும் பிடிக்கும், ஊதாரித்தனமாக ஊரை சுற்றுபவர்களுக்கும் பிடிக்கும். இந்த மூன்று தரப்பினருடைய பிரச்சினைகளை கூறுவதே இப்படத்தின் கதை," என்றார்.

சீ போ பொறுக்கி நாயே...
மேலும் அவர் கூறும்போது, வழக்கமாக பெண்களை கலாய்க்கும் பாடல்களை எழுதிவந்த கானா பாலா இப்படத்தில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் வகையில் ‘ச்சீபோ நாய பொறுக்கி.... தித்திக்கும்..' என்ற பாடலை எழுதிப் பாடி, நடனமாடியிருக்கிறார். இப்பாடலை 15 லட்ச ரூபாய் அளவில் குப்பம் ஒன்றை செட் போட்டு படமாக்கியுள்ளோம்.

தேசிய விருதுக்கே தேர்வாகும்...
மேலும், தாயின் பாசத்தை உணர்த்தும் மற்றொரு பாடல், பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் கண்டிப்பாக கண்கலங்க வைக்கும். இப்பாடல் தேசிய விருதுக்குக்கூட தேர்வாகும் நிலை உண்டாகும் என்று பார்த்தவர்களும், கேட்டவர்களும் கூறினார்கள்.

டூப் இல்லை
நாயகன் திலீபன் புகழேந்தி ஒரு பைக் ரேஸர். ஆகையால், படத்தில் வரும் சேசிங் காட்சியில் மிகவும் அபாயகரமான சண்டைகளை எந்தவித டூப்பும் இல்லாமல் தானாகவே நடித்து கொடுத்துள்ளார். இந்த சண்டைக் காட்சி வெகுவாக பேசப்படும்," என்றார்.
இப்படத்திற்கு ஏ.கே.சசிதரன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஜி.சிவராமன் கவனிக்கிறார். சன்லைட் சினிமாஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











