யப்பா வேற லெவல் மெலோடி.. யுவன் பின்னிட்டார்.. ஏழு கடல் ஏழு மலை முதல் சிங்கிள் ரிலீஸ்
சென்னை: கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம். முதல் படத்திலிருந்தே வித்தியாசமான கதைக்களை எடுக்கும் அவர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். அவர் இப்போது நிவின் பாலியை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அஞ்சலி உள்ளிட்டோரும் அந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். எப்போதும் போல ராமின் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ராம். பாலுமகேந்திராவிடம் நா. முத்துக்குமார் மூலமாக உதவி இயக்குநராக சேர்ந்த ராம் அடிப்படையில் இலக்கிய அறிவு ரொம்பவே இருப்பவர். பெரும்பாலும் பிறரின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதை பாலுமகேந்திரா நிறுத்தியிருந்த நேரம். மேகம் என்ற குறும்பட கதையை பாலுமகேந்திராவிடம் சொல்லி அவரை ஒளிப்பதிவு செய்யவும் ஒத்துக்கொள்ள வைத்தவர். அதனை கண்டு அப்போது பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களே ஆச்சரியம்தான் பட்டனர்.

முதல் படம்: பாலுமகேந்திராவிடம் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு கற்றது தமிழ் படத்தை முதன்முறையாக இயக்கினார் ராம். ஜீவா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. ஆனால் இப்போது பலரும் அதனை கொண்டாடிவருகிறார்கள். அந்த அளவுக்கு அப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும், வசனத்தையும் கூர்மையாக அமைத்திருப்பார். குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ் படித்தவரின் நிலைமை என்னவென்பதை பொட்டில் அடித்து சொல்லிய படம். அதனையடுத்து அவர் இயக்கிய தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்கள் அனைத்துமே கிளாசிக். தரமணி மட்டும் கொஞ்சம் சர்ச்சையை சந்தித்தாலும் அதுவும் பாராட்டையே பெற்றது.
பேரன்பு: பேரன்பு படத்தில் அஞ்சலி தன்னை ஏமாற்றியதை உணர்ந்த மம்மூட்டி, என்னையே ஏமாத்தற அளவு உங்களுக்கு எண்ணம் வந்திருக்குனா நீங்க என்னைவிட ஏதோ பெரிய கஷ்டத்தில் இருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்லும்படியான காட்சியை வைக்க ராமால் மட்டும்தான் முடியும். அந்த காட்சியில் அவ்வளவு பாடம் எடுத்திருப்பார் ராம். அதேபோல் திருநங்கையை காரில் ஏற்றிக்கொண்டு செல்லும் காட்சி; கடைசியில் அவரை தன் வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டது என்று பேரன்பு உண்மையில் தமிழ் சினிமாவில் எப்போதும் கிளாஸிக்கல்.
ஏழு கடல் ஏழு மலை: பேரன்பு படத்துக்கு பிறகு அவர் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோரை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி கடந்த மாதம் வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இதுவும் ராம் ஸ்டைலில் உருவாகி கலங்கடிக்க செய்யும் என்று கூறிவந்தனர். மேலும் அந்த க்ளிம்ப்ஸ் காட்சிக்கு தங்களது வரவேற்பையும் அவர்கள் கொடுத்தார்கள்.
முதல் சிங்கிள்: இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியிருக்கிறது. 'போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி' என்று தொடங்கும் அந்தப் பாடலை நடிகர் சித்தார்த் பாடியிருக்கிறார். மதன் கார்க்கி பாடலை எழுதியிருக்கிறார். ராம் படத்துக்கு என்றால் யுவன் ஷங்கர் ராஜா கூடுதல் சிரத்தை எடுத்து இசையமைப்பார். அவர்கள் கூட்டணியில் வெளியான அத்தனை பாடல்களும் க்ளாசிக்காக இருக்கின்றன.
இந்தப் பாடலை கேட்கும்போது கண்டிப்பாக இதுவும் அந்த வரிசையில் இணைந்துவிடும் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். முக்கியமாக யுவனின் இசை அப்படியே அமைதி நிலைக்கு கொண்டு செல்கிறது என்றும் அதற்கு சித்தார்த்தின் குரலும், மதன் கார்க்கியின் வரிகளும் பக்காவாக உதவியிருக்கின்றன என்றும் கூறும் ரசிகர்கள்; பாடலாசிரியர் நா. முத்துக்குமார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்தப் பாடலின் வரிகள் இன்னும் மேற்கொண்டு மின்னியிருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











