Yezhu Kadal Yezhu Malai - ஏழு கடல் ஏழு மலை க்ளிம்ப்ஸ் எப்போது?.. வெளியானது அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம். முதல் படத்திலிருந்தே வித்தியாசமான கதைகளை எடுக்கும் அவர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். அவர் இப்போது நிவின் பாலியை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அஞ்சலி உள்ளிட்டோரும் அந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ராம். பாலுமகேந்திராவிடம் நா. முத்துக்குமார் மூலமாக உதவி இயக்குநராக சேர்ந்த ராம் அடிப்படையில் இலக்கிய அறிவு ரொம்பவே இருப்பவர். பெரும்பாலும் பிறரின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதை பாலுமகேந்திரா நிறுத்தியிருந்த நேரம். மேகம் என்ற குறும்பட கதையை பாலுமகேந்திராவிடம் சொல்லி அவரை ஒளிப்பதிவு செய்யவும் ஒத்துக்கொள்ள வைத்தவர்.

முதல் படம்: பாலுமகேந்திராவிடம் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு கற்றது தமிழ் படத்தை முதன்முறையாக இயக்கினார் ராம். ஜீவா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. ஆனால் இப்போது பலரும் அதனை கொண்டாடிவருகிறார்கள். அந்த அளவுக்கு அப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும், வசனத்தையும் கூர்மையாக அமைத்திருப்பார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ் படித்தவரின் நிலைமை என்னவென்பதை பொட்டில் அடித்து சொல்லிய படம். அதனையடுத்து அவர் இயக்கிய தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்கள் அனைத்துமே கிளாசிக். தரமணி மட்டும் கொஞ்சம் சர்ச்சையை சந்தித்தாலும் அதுவும் பாராட்டையே பெற்றது.
பேரன்பு: பேரன்பு படத்தில் அஞ்சலில் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த மம்மூட்டி, என்னையே ஏமாத்தற அளவு உங்களுக்கு எண்ணம் வந்திருக்குனா நீங்க என்னைவிட ஏதோ பெரிய கஷ்டத்தில் இருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்லும்படியான காட்சியை வைக்க ராமால் மட்டும்தான் முடியும். அந்த காட்சியில் அவ்வளவு பாடம் எடுத்திருப்பார் ராம். அதேபோல் திருநங்கையை காற்றில் ஏற்றிக்கொண்டு செல்லும் காட்சி; கடைசியில் அவரை தன் வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டது என்று பேரன்பு உண்மையில் தமிழ் சினிமாவில் எப்போதும் கிளாஸிக்கல்.
ஏழு கடல் ஏழு மலை: பேரன்பு படத்துக்கு பிறகு அவர் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோரை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் அந்தப் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் க்ளிம்ப்ஸ் காட்சியானது இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச விழாவுக்கு தேர்வு: முன்னதாக இந்தப் படமானது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் பிக் ஸ்க்ரீன் போட்டிக்கு படம் தேர்வாகியிருக்கிறது. இதுகுறித்து படக்குழு சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், "ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதிவரை நடைபெறவிருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டி பிரிவு பிக் ஸ்க்ரீன் விருதுக்கு ஏழு கடல் ஏழு மலை படம் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பெருமை கொள்கிறோம்..
அனைவருக்கும் நன்றி: இதனை சாத்தியமாக்கிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி, இசையில் நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவை சிறப்பாக கையாண்டிருக்கும் ஏகாம்பரத்திற்கும் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வு குழுவுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications











