Yogi babu - என்னது கோயிலில் தீண்டாமையா?.. நடிகர் யோகிபாபு விளக்கம்
சென்னை: Yogi Babu (யோகிபாபு) சிறுவாபுரி முருகன் கோயிலில் யோகிபாபுவுக்கு தீண்டாமை கொடுமை நடந்ததாக வெளியான தகவல் குறித்து அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் யோகிபாபு. அவரது கவுண்ட்டர்களும், டைமிங் சென்ஸும் ரசிகர்களை வெகுவாக சிரிக்க வைப்பவை.லொள்ளு சபாவின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு பெரிய திரைக்கு வந்தவர். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த யோகிபாபு இப்போது இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நகைச்சுவை செய்துவிட்டார்.

ஹீரோ யோகிபாபு: காமெடி நடிகராக மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கிவருபவர் யோகிபாபு. நெல்சன் திலீப்குமார் முதன்முதலில் இயக்கிய கோலமாவு கோகிலா படத்த்தின் மூலம்தான் லீட் ரோலில் நடித்தார் யோகி. அது நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து கூர்கா உள்ளிட்ட படங்களில் லீட் ரோலில் நடித்தாலும் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டேலா: அப்படிப்பட்ட சூழலில் மண்டேலா படத்தில் நடித்தார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. எனவே இனி யோகிபாபு தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிப்பார் என கருதப்பட்டது. ஆனால் வந்த வழியை மறக்காத அவர் காமெடி வேடங்களிலும் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த மாவீரன் படம் மெகா ஹிட்டானது.
ஜெயிலரில் யோகிபாபு: அதேபோல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் படத்திலும் காமெடி கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் அவர். ட்ரெய்லரில் ஒரே ஒரு சீனில் வரும் அவர் ரஜினியிடம் பேசும் ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. எனவே படம் முழுக்க சிரிப்பு பட்டாசை கொளுத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படமானது நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முருக பக்தர்: யோகிபாபு தீவிரமான முருக பக்தர் ஆவார். அதனால் தமிழ்நாட்டில் இருக்கும் திருச்செந்தூர், பழனி என புகழடைந்த முருகன் கோயில்கள் முதற்கொண்டு சிறிய முருகன் கோயில்கள்வரை சென்றுவருவது அவரது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு அவர் சென்றதாகவும்; அப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்றும் ஒரு வீடியோ பரவியது. அதில் கோயில் அர்ச்சகர் யோகிபாபுவிடம் கைகொடுக்க மறுத்துவிட்டார். அதனையடுத்து தீண்டாமை கொடுமையை அனுபவித்துவிட்டார் யோகிபாபு என பலர் கூறினர்.
விளக்கம்: இந்நிலையில் அதுகுறித்து யோகிபாபு அளித்திருக்கும் விளக்கத்தில், "12 ஆண்டுகளாக சிறுவாபுரி கோயிலுக்கு சென்றுவருகிறேன். அப்போதிருந்தே அந்த அர்ச்சகரை எனக்கு தெரியும். வேண்டுமென்றே இப்படி யாரோ வதந்திகளை பரப்புகிறார்கள். அது பழைய வீடியோ.. இதில் சாதியை பார்க்க வேண்டாம். அந்த அர்ச்சகரால் தீண்டாமை எதுவும் எனக்கு நடக்கவில்லை" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











