வடிவேலு பாணியில் யோகி பாபுவுக்கு ரெட் கார்டு..? தயாரிப்பாளருடன் மோதலா... பின்னணி என்ன?
சென்னை: தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு தற்போது ஜெயிலர், ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அதேபோல், சின்ன பட்ஜெட் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வரும் யோகி பாபுவுக்கு, ஏராளமான பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.
இந்நிலையில், படப்பிடிப்புக்கு தாமதமாக சென்றதால் யோகி பாபுவுக்கும் படத் தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து வடிவேலு பாணியில் யோகி பாபுவுக்கும் ரெட் கார்டு கொடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

காமெடி கிங் யோகி பாபு
விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான யோகி பாபு, சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது கேரியரை தொடங்கினார். கலகலப்பு, சென்னை எக்ஸ்பிரஸ் படங்கள் மூலம் லைம் லைட்டுக்கு வந்த யோகி பாபு, இப்போது கோலிவுட்டின் காமெடி கிங்காக கலக்கி வருகிறார். ரெட் கார்டு காரணமாக வடிவேலு பீல்ட் அவுட் ஆகியிருந்த நேரத்தில், அந்த கேப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் யோகி பாபு.

படப்பிடிப்பில் பிரச்சினையா?
பொங்கலுக்கு வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் முக்கியமான காமெடி ரோலில் நடித்திருந்தார் யோகி பாபு. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் பொம்மை நாயகி, இரும்பன் ஆகிய படங்கள் வெளியாகின. இந்நிலையில், படப்பிடிப்பில் தயாரிப்பாளருடன் யோகி பாபுவுக்கு பிரச்சினை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருநெல்வேலி பகுதிகளில் யோகி பாபு நடிக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறதாம்.

ரெட் கார்டு கொடுக்கப்படுகிறதா?
திருநெல்வேலியில் நடக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் 9 மணிக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு, 11.30 மணிக்கு தான் வருகிறாராம் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் ஒரு மணி நேரம் பிரேக் எடுத்துக்கொண்டு அதன்பின்னரே ஷூட்டிங் ஸ்பாட் செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன் காரணமாக யோகி பாபுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகின.

பின்னணி என்ன?
ஏற்கனவே ஷூட்டிங்கில் தில்லாலங்கடி வேலைகள் செய்ததால் தான் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பல வருடங்கள் வீட்டில் இருந்தார். இந்நிலையில், தற்போது அதேபோல யோகி பாபுவும் ரெட் கார்டு வாங்கிவிட போகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தன. ஆனால், யோகி பாபு முன்னமே தகவல் கொடுத்துவிட்டு தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டாக சென்றதாகவும், அது ஒருநாள் மட்டுமே நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மீண்டும் பிஸியான யோகி பாபு
இதனால் யோகி பாபுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுவதாக வரும் செய்திகள் உண்மையில்லை என சொல்லப்படுகிறது. ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான், சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் யோகி பாபு. எப்போதும் போல அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருவதால் தான், சில நேரங்களில் சரியான நேரத்தில் யோகி பாபுவால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லையாம்.


Click it and Unblock the Notifications











