கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்... தள்ளிப் போகிறது காமெடி நடிகர் யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி?
சென்னை: காமெடி நடிகர் யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தள்ளிப்போவதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் பிசி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. அவர் கால்ஷீட்டுக்காக முன்னணி ஹீரோக்கள் கூட காத்திருக்க வேண்டிய நிலை.
ரஜினி, அஜித், விஜய் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு பிசி.

திருமணம்
இவருக்கும் உறவினரான மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் பிப்ரவரி 5 ஆம் தேதி, திருத்தணி முருகன் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இதில் மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக சக நடிகர்களையும், நண்பர்களையும் திருமணத்துக்கு அழைக்க முடியவில்லை என்று கூறியிருந்தார் யோகிபாபு.

முதல்வர்
இந்நிலையில், ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரைச் சந்தித்து திருமண வரவேற்புக்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்திருந்தார். சினிமா பிரபலங்களையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வந்தார்.

ஊரடங்கு உத்தரவு
இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, நாடு முழுவதும் இப்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. சினிமா படப்பிடிப்புகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பட ரிலீஸ்கள் தள்ளிப் போயுள்ளன. பிரபலங்கள் உட்பட பொதுமக்கள் யாரும் எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

என்ன செய்வது?
இதற்கிடையே, நடிகை உத்ரா உண்ணி, மலையாள நடிகர் மணிகண்டன் ஆச்சாரி, தெலுங்கு ஹீரோ நிதின் ஆகியோர் தங்கள் திருமண விழாக்களை தள்ளி வைத்துள்ளனர். சிலர் எளிமையாக குடும்பத்துக்குள் நடந்த முடிவு செய்துள்ளனர். இதையடுத்து நடிகர் யோகிபாபுவும் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தள்ளி வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மே மாதம் தள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











