யோகி பாபு நடித்துள்ள இரும்பன்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு... இயக்குநருக்கு கிடைத்த வெற்றி!
சென்னை: கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு.
கதைக்கு முக்கியத்துவம் உள்ள மினிமம் பட்ஜெட் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், யோகி பாபு முதன்மையான கேரக்டரில் நடித்துள்ளது இரும்பன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் இயக்குநர் கீராவின் பெயரை பயன்படுத்த வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யோகி பாபுவின் இரும்பன்
தமிழ்த் திரையுலகின் முக முக்கியமான காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. தமிழ் மட்டுமில்லாமல் இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், காமெடி மட்டுமின்றி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதன்படி யோகி பாபு நடித்துள்ள இரும்பன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு
முன்னதாக இந்தப் படத்தின் விளம்பர போஸ்டர்கள் இயக்குநர் கீராவின் பெயர் இல்லாமல் வெளியாகியிருந்தது. இதற்கு திரையுலகில் இருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தயாரிப்பாளருக்கும் - இயக்குநருக்கும் இடையில் பிரச்சினை இருந்தாலும், அது பேசி தீர்க்கப்பட வேண்டும். அதற்காக இயக்குநரின் பெயர் இருட்டடிப்பு செய்யக்கூடாது என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திருந்தனர்.

இயக்குநருக்கு சம்பள பிரச்சினை
இதனைத் தொடர்ந்து இயக்குநருக்கு இன்னும் முழு சம்பளமும் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதுகுறித்து இயக்குநர் கீரா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், கதை, திரைக்கதை, வசனம் போன்ற பணிகளுக்காக 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறி கடந்த 2020ம் ஆண்டு அக்ரிமெண்ட் கையெழுத்திட்டேன். ஆனால், தற்போது வரை தனக்கு 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், ஆரம்ப தயாரிப்பு பணிகளுக்காக ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மேலும், தனக்கு வழங்க வேண்டிய 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கொடுக்காமல் திரையரங்கு, டிஜிட்டல், ஓடிடி போன்ற எந்த தளத்திலும் வெளியிட தடைவிதிக்க வேண்டுமென நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை 17வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜி. புவனேஸ்வரி, இயக்குநருக்கு வழங்க வேண்டிய 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை 3 நாட்களுக்குள் அவரது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், இல்லையென்றால் இரும்பன் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இயக்குநர் மகிழ்ச்சி
அதுமட்டும் இல்லாமல் இரும்பன் பட போஸ்டர் உள்ளிட்ட விளம்பரங்களில் கீராவின் பெயர் இடம்பெற வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இயக்குநர் கீராவின் பெயர் இரும்பன் போஸ்ட்டரில் சேர்க்கப்பட்டது. சம்பள விவகாரம், பெயர் பிரச்சினை என எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்த அதேநேரம், படமும் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











