யூ டூ விஜய் சேதுபதி..? - 'ஜுங்கா' ஷூட்டிங்கால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை : தமிழ் திரையுலகம் நடத்திவரும் ஸ்ட்ரைக்கை மீறி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் உட்பட 4 படங்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது, தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
"சென்னையில் நடந்த சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டன. ஆனால் செட் அமைத்து ஏற்கெனவே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த சில படங்களின் படப்பிடிப்புகளை கூடுதலாக ஓரிரு நாட்கள் நடத்த அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி 4 படங்களின் படப்பிடிப்பை தொடர அனுமதி கேட்டு சங்கத்தில் அதன் தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தனர். அதன்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் துரைராஜ் விளக்கம் அளித்திருந்தாலும் தயாரிப்பாளர்கள் அதனை ஏற்கவில்லை.
சில தயாரிப்பாளர்கள் பகிரங்கமாகவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஸ்ட்ரைக் நேரத்தில் விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சர்ச்சை ஓய்வதற்குள் விஜய்சேதுபதி நடிக்கும் 'ஜுங்கா' படக்குழுவினர் போர்ச்சுக்கல் நாட்டிற்குச் சென்றுள்ளனர்.
விஜய் சேதுபதி, சாயிஷா, இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் உட்பட பலர் சென்றுள்ளனர். அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. ஸ்ட்ரைக் நடக்கும் நேரத்தில் இவர்கள் இப்படி சென்றது, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா துறை பற்றியும், தயாரிப்பாளர்களின் கஷ்டம் பற்றியும் நன்றாகப் புரிந்த, எப்போதும் ஆதரவாகப் பேசுகிற விஜய் சேதுபதியே ஸ்ட்ரைக்கை மீறுவது ரசிகர்களுக்கும் அதிர்ச்சிசை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











