கேரளாவில் விஜய்யின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து ரசிகர் பலி
பாலக்காடு: கேரளாவில் கத்தி படம் பார்த்துவிட்டு குஷியில் வெளியே வந்த ரசிகர் ஒருவர் விஜய்யின் மெகா கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து பலியானார்.
கத்தி படம் தமிழகம் தவிர கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. கேரளாவில் மட்டும் சுமார் 200 தியேட்டர்களில் படம் ரிலீஸாகியுள்ளது. கேரளாவில் விஜய்யுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் தான் அங்கும் கத்தி படம் பல தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. விஜய்க்கு சேட்டன் ரசிகர்கள் அதிகம்.

கேரளாவில் ஓடும் ரயில்களில் முதல்முறையாக தமிழ் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த தமிழ் படம் கத்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கன்சேரியைச் சேர்ந்த உன்னி என்பவர் புதன்கிழமை கத்தி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார்.
படம் பார்த்த குஷியில் வெளியே வந்த அவர் தியேட்டர் அருகில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் மெகா கட் அவுட்டில் ஏறி அதற்கு பாலாபிஷேகம் செய்தார். அப்போது அவர் கால் தவறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











