“ரித்திகாவைக் கல்யாணம் பண்ணிக் கொடுங்க”.. பிரபல நடிகையின் வீட்டிற்குச் சென்று ரகளை செய்த ரசிகர்!
சீரியல் நடிகை ரித்திகா வீட்டிற்குச் சென்று இளைஞர் ஒருவர் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: நடிகை ரித்திகா வீட்டிற்குச் சென்று ரகளை செய்த கோவை இளைஞரை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் நாயகனின் தங்கையாக நடித்து வருபவர் ரித்திகா. இவர் சென்னை வடபழனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை ரித்திகா வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவர் ரித்திகாவின் தந்தையிடம், "நான் கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து வருகிறேன். எனக்கு ரித்திகாவை மிகவும் பிடிக்கும். சீரியலில் பார்த்து அவரைக் காதலிக்கிறேன். எனக்கு அவரைத் திருமணம் செய்து வையுங்கள்" என ரகளை செய்துள்ளார்.
இதனால் பயந்து போன ரித்திகாவின் தந்தை சுப்பிரமணி, உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். ரோந்துப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக ரித்திகாவின் வீட்டிற்கு வந்து, சம்பந்தப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ரகளையில் ஈடுபட்ட நபர் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த பரத் (24) என்பது தெரிய வந்தது. பொறியாளரான அவர், கோவா செல்வதற்காக சென்னை வந்துள்ளார். விமானத்தை தவறவிட்டதால், ரித்திகாவின் முகவரியை தெரிந்து கொண்டு அவரின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, பரத்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போலீசார், அவர்களை நேரில் வரவழைத்து பரத்தை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
பரத் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அடிக்கடி இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாகவும் போலீசாரிடம் பரத்தின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதோடு, இனி தங்கள் மகனால் ரித்திகாவிற்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும் அவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துச் சென்றுள்ளனர்.
நடிகையின் வீட்டிற்கு இளைஞர் ஒருவர் வந்து ரகளை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











