இல்லாதவர்களை பார்த்து சிரிப்பவன் நான் அல்ல..மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்ஃபான்..வெளுக்கும் ரசிகர்கள்
சென்னை: யூடியூபில் சேனல் ஆரம்பித்து ஃபேமஸ் ஆனவர் இர்ஃபான். ஹோட்டல்களுக்கு சென்று உணவு சாப்பிட்டு அதனை ரிவ்யூ செய்து வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அது போகப்போக படு பிரபலமானதைத் தொடர்ந்து இவருக்கும் வெளிச்சம் கிடைத்தது. அப்படி கிடைத்த வெளிச்சத்தை பயன்படுத்தி பிரபலங்களையும் பேட்டி எடுத்தார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் வீட்டுக்கும் சென்றார். இப்படி வளர்ச்சியடைந்திருக்கும் அவரை சுற்றி சர்ச்சைகளும் வந்துகொண்டேதான் இருக்கின்றன.
யூடியூபர் இர்ஃபானை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் குறைவுதான். முதலில் ஒரு யூடியூப் சேனலை தொடங்கிய அவர்; ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு; அந்த உணவு குறித்த தனது பார்வையை வீடியோவாக வெளியிட்டார். விதவிதமாக சாப்பிட்டு வியூஸ்களை அள்ளிய அவருக்கு சப்ஸ்க்ரைபர்களும் குவிய தொடங்கினார். அதன்படி இப்போது அவருக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள். இதனால் அவருக்கு யூடியூபிலிருந்து வருமானமும் வர ஆரம்பித்தது.
பிரபலமான இர்ஃபான்: தொடர்ந்து அவரது வீடியோக்கள் வியூஸ்களை பெற்றதன் காரணமாக அவரும் கடகடவென பிரபலமடைய ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், நாக சைதன்யா, திமுக எம்.பி. கனிமொழி என பலருடன் அமர்ந்து சாப்பிட்டு அவர்களை பேட்டியும் எடுத்தார். அதனைத் தொடர்ந்து மோகன் லால் உள்ளிட்டோரையும் அவர் பேட்டி எடுத்து வளர்ச்சியில் அடுத்தக்கட்டத்துக்கு சென்றார் இர்ஃபான்.

ட்ரோலுக்கு உள்ளான இர்ஃபான்: மேலும் அமெரிக்காவுக்கு சென்று நெப்போலியனையும், அவரது மகன் தனுஷையும் சந்தித்தார். அந்த வீடியோ அவருக்கு மேலும் ஒரு பிரபல்யத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. பிறகு அடிக்கடி நெப்போலியனை சந்தித்த அவரை ஒருதரப்பினர் கிண்டல் செய்யவும் ஆரம்பித்தார்கள். இருப்பினும் அவர் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் வீடியோ போடுவதை அதிகப்படுத்தினார். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்சியிலும் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகள்: ஒருபக்கம் அவர் புகழடைந்தாலும் மறுபக்கம் சர்ச்சைகளையும் சம்பாதித்தார். முதலில் சென்னையில் அவரது வாகனம் ஏற்படுத்திய விபத்தால் ஒரு பெண் உயிரிழந்தார். அந்த வாகனத்தை இர்ஃபான்தான் ஓட்டினார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு அவர் இல்லை அவரது உறவினர் ஒருவர்தான் காரை இயக்கினார் என்று கூறப்பட்டது. அந்த சர்ச்சை முடிந்த கையோடு, தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது கருவில் இருந்த குழந்தை ஆணா, பெண்ணா என்பது தொடர்பான வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டது பெரும் அதிர்வலையை கிளப்பியது.
அதிகாரவர்க்கத்தின் செல்வாக்கு: இந்த இரண்டு விஷயங்களும் இர்ஃபானுக்கு பெரிய பிரச்னையாக மாறியது. கண்டிப்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் குரல்கள் எழுப்பினார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதற்கு ஒரே காரணம் அவருக்கு அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு இருக்கிறது. அதனை வைத்து தப்பித்துக்கொள்கிறார் என்றும் பலர் ஓபனாகவே சொல்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சமீபத்தி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார். அதாவது சென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இர்ஃபானும், அவரது மனையும் காரில் சென்று துணியும், பணமும் கொடுத்தார்கள். அப்போது இர்ஃபான் நடந்துகொண்ட விதமும், இல்லாதவர்களை பார்த்து பேசிய விதமும் அனைவருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பலரும் அவரது சேனலை Unsubscribe செய்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள்.
இர்ஃபான் மன்னிப்பு: அவர் அந்த சமயத்தில் அதற்கு மேம்போக்காக ஒரு காரணத்தை சொல்லி கடந்துவிட்டார். இருப்பினும் அவருக்கு இருந்த சப்ஸ்க்ரைபர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தார்கள். அதுமட்டுமின்றி வியூஸ்களும் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் அவர் ரம்ஜான் பண்டிகையின்போது நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர், "ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கியபோது நான் நடந்துகொண்ட விதம் தவறுதான். இல்லாதவர்களை பார்த்து சிரிக்கும் ஆள் நான் இல்லை. இந்த விஷயம் தொடர்பாக அன்றே பேசியிருந்தால் தவறாக போயிருக்கும். அதனால் இப்போது மன்னிப்பு கேட்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, 'வீடியோக்களுக்கு வியூஸ் குறைய ஆரம்பித்துவிட்டதால் இர்ஃபானுக்கு பயம் வந்துவிட்டது. அந்த பயத்தின் வெளிப்பாடுதான் இந்த தாமதமான மன்னிப்பு' என்று வெளுத்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











