Ilayaraaja - மரண படுக்கையில் நண்பரின் கடைசி ஆசை.. அலட்சியம் செய்தாரா இளையராஜா?
சென்னை: Ilayaraaja (இளையராஜா) மரண படுக்கையில் இருந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் கடைசி ஆசையை இளையராஜா அலட்சியம் செய்துவிட்டாரா என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் சிலர் எழுப்பிவருகின்றனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்களில் ஒருவர் மலேசியா வாசுதேவன். பாரதிராஜா இயக்கத்தில் உருவான 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலை பாடி வெகு பிரபலமடைந்தார். அந்தப் பாடலில் மலேசியா வாசுதேவனின் குரல் தனித்துவமாக இருந்ததால் அவர் இளையராஜாவின் இசையில் ஏகப்பட்ட பாடல்களை பாடி ராஜாவின் கோட்டையில் தவிர்க்க முடியாத தளபதியாக விளங்கினார்.

ராஜா - மலேசியா வாசுதேன் கூட்டணி : 16 வயதினிலே படத்தில் ஆரம்பித்த இளையராஜா - மலேசியா வாசுதேவன் கூட்டணி அதன் பிறகு தொடர்ந்து ரசிகர்களின் காதுகளுக்கு தொடர்ந்து விருந்து படைத்தது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம், முரட்டுக்காளை படத்தில் பொதுவாக என் மனசு தங்கம், முதல் மரியாதை படத்தில் வெட்டி வேரு வாசம், பன்னீர் புஷ்பங்கள் படத்தில் கோடை கால காற்றே, புதிய வார்ப்புகள் படத்தில் இந்த மின்மினிக்கு என ஏகப்பட்ட பாடல்கள் க்ளாசிக்காக அமைந்தன.
ஏ.ஆர்.ரஹ்மானுடன் மலேசியா வாசுதேவன்: இளையராஜாவுடன் மட்டுமின்றி ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார் மலேசியா வாசுதேவன். குறிப்பாக கிழக்கு சீமையிலே படத்தில் இடம்பெற்ற தென் கிழக்கு சீமையிலே பாடல் எப்போது மலேசியா வாசுதேவனின் ஸ்பெஷலில் ஒன்று. ஏனெனில், மலேசியா வாசுதேவனின் குரல் பெரும்பாலும் ஃபோக் மெட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டுவந்த சூழலில், ஒரு மென்சோக பாடலுக்கு அவரது குரலை ரஹ்மான் பயன்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

8000 பாடல்கள்: மொத்தம் 8000 பாடல்கள்வரை பாடியிருக்கும் மலேசியா வாசுதேவன் விஜய் நடித்த பூவே உனக்காக, பத்ரி உள்ளிட்ட படங்களிலும் நடித்து நடிகராகவும் முத்திரை பதித்தார். இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு பலே பாண்டியா படத்தில் பாடல் பாடினார். பிறகு 2011ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் உயிரிழந்தாலும் அவரது பாடல்களை இன்றுவரை பலரும் கேட்டு சிலாகித்துக்கொண்டிருக்கின்றனர்.
யுகேந்திரன் பேட்டி: இந்நிலையில் மலேசியா வாசுதேவனின் இறுதி நிமிடங்கள் குறித்து அவரது மகனும், பாடகருமான யுகேந்திரன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில், "அப்பா ஒரு வாரம் ஐசியூவில் இருந்தார். அவர் இளையராஜாவை பார்க்க வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டார். அந்த ஒரு வாரத்தில் இளையராஜாவின் மனைவி ஜீவா வந்து எனது அப்பாவை பார்ததுவிட்டு சென்றார். அப்போது எனது அம்மாவும் ஜீவா ஆண்ட்டியிடம் இளையராஜா வந்து பார்த்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்.

இளையராஜா வந்தபோது கத்திவிட்டேன்: ஆனால் அந்த ஒருவாரத்தில் இளையராஜா வரவே இல்லை. ஒருகட்டத்தில் அப்பாவின் உடல்நிலை மோசமாகி இனி ஒன்றும் செய்ய முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். நிலைமையை உணர்ந்துகொண்ட நாங்கள் கொஞ்ச நேரம் அப்பாவுடன் நேரத்தை செலவிடலாம் என முடிவெடுத்தோம்.
அப்போதுதான் இளையராஜா வந்தார். சரியாக அந்த நேரத்தில் அப்பா இறந்துவிட்டார். அந்த நேரத்தில் இளையராஜாவிடம் நான், 'உங்களுக்காகத்தான் காத்திருந்தார். இப்போதான் வர முடிந்ததா. உயிர் போயிடுச்சு போங்க' என்றேன்.

கூடவே இருந்தார்: அது கோபம் இல்லை. ஆதங்கம். ஆனால் அதற்கு பிறகு அப்பாவின் இறுதிச்சடங்கு முடியும்வரை கூடவே இளையராஜா இருந்தார். அவர் பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்களுக்கெல்லாம் போகமாட்டார். அதன் பிறகு என்னிடம் நீ ஏன் சிங்கப்பூர்லாம் போற இங்கேயே இரு நாங்கள் எல்லாம் இல்லையா என உரிமையாக என்னிடம் கேட்டார்" என யுகேந்திரன் பேசினார்.
அலட்சியம் செய்தாரா இளையராஜா: யுகேந்திரனின் இந்தப் பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, மலேசியா வாசுதேவனை இளையராஜா நினைத்திருந்தால் போய் பார்த்திருக்கலாம். அவர் தனது ஆஸ்தான நண்பர், பாடகரின் கடைசி ஆசையை அலட்சியம் செய்திருக்கக்கூடாது என ஒரு தரப்பினர் கமெண்ட்ஸ்ட் செய்துவருகின்றனர். முன்னதாக, மனோபாலாவுக்கு இளையராஜா தெரிவித்த இரங்கலும் பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











