யுவன் மதம் மாறியபோது இளையராஜா ரியாக்ஷன்.. என்னோட கல்யாணத்துக்கு இதனாலதான் வரல - மனம் திறந்த யுவன்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கக்கூடியவர் யுவன் ஷங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ள யுவன் ஷங்கர் ராஜா, படங்கள் இயக்கவும் தனக்கு விருப்பம் இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா அண்மையில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அது குறித்து பார்க்கலாம்.
யுவன் சங்கர் ராஜா அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது குடும்ப விஷ்யங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ள விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ப்ரைஸை ஏற்படுத்தியுள்ளது. யுவன் சங்கர் ராஜா தற்போது ஜஃப்ரூன் நிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார். இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதற்கு முன்னர் யுவன் சங்கர் ராஜா இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர். மேலும் ஜஃப்ரூன் நிஷா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரைத் திருமணம் செய்து கொள்ள யுவன் சங்கர் ராஜா இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறினார்.

இளையராஜா: யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியது அவரது தந்தையான இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் யுவன் சங்கர் ராஜாவின் திருமணத்திற்கே இளையராஜா செல்லவில்லை என அப்போது பரவலாக பேசப்பட்டது. இதுதொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில்," நான் மதம் மாறியபோது அப்பா (இளையராஜா) என்னைத் தடுக்கவில்லை. மாறாக அவர் கூறியது, தினமும் ஐந்து முறை கடவுளைத் தொழுகின்றேன் எனக் கூறுபவனை ஏன் தடுக்க வேண்டும் என்றுதான் கூறினார். மேலும் எனது திருமணம் திடீரென நடைபெற்றது. நான் இன்று கிளம்பி ஊருக்குப் போகின்றேன், அடுத்த நாள் திருமணம் என முடிவாகிவிட்டது. நான் உடனே அப்பாவுக்கு போன் செய்து விவரத்தைச் சொன்னேன்.

அசௌகரியம்: உடனே அவர் கூறியது, " நான் கல்யாணத்திற்கு வந்துவிடுவேன். அதில் எனக்கு எந்த சிரமும் இல்லை. ஆனால் நான் வருவதால் திடீர் ஏற்பாடுகளை செய்து கல்யாணத்தில் அனைவரும் என்னை கவனிக்க வேண்டும் என்ற நெருக்கடியை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் நல்லபடியாக கல்யாணம் செய்துட்டு வாங்க. நான் அங்கு வந்து, என்னால் அங்கிருப்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கு" எனக் கூறினார். அதன் பின்னர் நானும் எனது மனைவியும் அப்பாவைப்போய் பார்த்தோம். மேலும் இப்போதுவரை அப்பா மிகவும் அன்பாகவே எங்களுடன் இருக்கின்றார் எனக் கூறினார். யுவன் சங்கர் ராஜாவின் இந்தப் பேச்சு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேட்டை: மேலும் அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், சிறுவயதில் நான் மிகவும் ஜாலியான சேட்டை பிடித்த பையன். எல்லோரையும் வைத்து பிராங்க் செய்து கொண்டு இருப்பேன். ஆனால் எனது அண்ணன் கார்த்திக் ராஜா மிகவும் அமைதியான சமத்து பையன் என பேசினார். இளையராஜா அண்மையில் நடைபெற்ற பிரேம்ஜியின் திருமணத்திற்கும் செல்லவில்லை. பிரேம்ஜியின் திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்றது. இளையராஜா அங்கு சென்றால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் அவர் அங்கு வரவில்லை என இயக்குநரும் இளையராஜாவின் தம்பி மகனுமான வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











