12 வருட கடனை அடைத்த யுவன் சங்கர் ராஜா.. வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த SK-வின் பராசக்தி.. என்ன கடன் தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் பராசக்தி. இந்த படம் வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டுள்ளது. இப்படி இருக்கும்போது, படத்தின் ஒரு பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஒரு பாடலை பாடியதன் மூலம் யுவன் சங்கர் ராஜா தனது 12 வருட கடனைத் திருப்பிச் செலுத்தி உள்ளார். அது என்ன கடன் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, பிரித்வி பாண்டியராஜன், ஸ்ரீ லீலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இது இவரது இசையில் உருவாகும் 100வது படம். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல் படத்தின் முதல் பாடலான அடியே அலையே பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார். மேலும் அவருடன் இணைந்து பாடகி தீ-யும் பாடியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா: பாடல் 13 மில்லியன் பார்வைகளை கடந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படி இருக்கையில் இந்த படத்தின் அடுத்த பாடலை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் படக்குழு களமிறங்கி விட்டது. இது தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்து, குறிப்பாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், தனது எக்ஸ் பக்கத்தில் பராசக்தி படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் இசையமைப்பாளரும் பாடகருமான யுவன் சங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, " லெஜண்ட் யுவன் சங்கர் ராஜா பராசக்தி படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்" என்று கேப்ஷன் இட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட்டுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
12 வருட கடன்: பராசக்தி படத்தில் பாடல் பாடுவதன் மூலம் யுவன் சங்கர் ராஜா தனது 12 வருட கடனை அடைத்துள்ளார். அதாவது, கடந்த 2013 ஆம் ஆண்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் பிரியாணி. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் யுவன் சங்கர் ராஜாவுக்கு 100வது படம். இந்த படத்தில் இடம் பெற்ற " எதிர்த்து நில் எதிரியே இல்லை" என்ற பாடலின் ஒரு பகுதியை ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியிருந்தார். இப்படி இருக்கையில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100வது படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல் பாடி தனது 12 ஆண்டுகால அன்புக் கடனை திருப்பிச் செலுத்தி உள்ளார். யுவன் சங்கர் ராஜா குரலில் பாடலைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











