என் மீது குத்தப்பட்ட முத்திரை.. ரூமுக்குள் அழுதேன்.. யுவன் ஷங்கர் ராஜா ஓபன் டாக்.. GOAT எஃபெக்ட்டோ?
சென்னை: யுவன் சங்கர் ராஜா இப்போது GOAT படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் மூன்று பாடல்களுமே ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் ட்ரெய்லரில் இடம்பெற்ற பின்னணி இசை நன்றாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதேசமயம் பழைய யுவன் இல்லை என்ற விமர்சன குரல்களும் ஆங்காங்கே எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தச் சூழலில் பள்ளி விழாவில் யுவன் ஷங்கர் ராஜா பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் 1997ஆம் ஆண்டு வெளியானது. அரவிந்தன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும்போது அவருக்கு வயது 15லிருந்து 17க்குள்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தில் அவரது இசை பெரிதாக கவனிக்கப்படவில்லை.

கவனம் ஈர்த்த யுவன் ஷங்கர் ராஜா: முதல் படத்தில் கவனிக்கப்படாமல் போன யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இயக்குநர் வசந்த்தின் படங்களில் எப்போதும் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதற்கு தகுந்ததுபோல் இசையமைத்தார் யுவன் ஷங்கர் ராஜா. இன்றுவரை பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் பாடல்கள் அனைத்தும் எவர் க்ரீனாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
உச்சம் தொட்ட யுவன்: பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்கு பிறகு யுவனின் மெட்டுக்கள் எல்லாமும் ஹிட்டாகின. இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர், தேவா, கார்த்திக் ராஜா என்று பலரும் தங்களது பெஸ்ட்டை கொடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் உள்ளே வந்து தனது எளிமையான இசை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார் யுவன். குறிப்பாக செல்வராகவனுடன் அவர் இணைந்து 2000களின் தொடக்கத்தில் யுவன் கொடுத்தது எல்லாமே ஹிட். அதேபோல் ராம், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, அமீர் என பல இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து யுவன் ஷங்கர் ராஜா உச்சம் தொட்டார்.
GOAT: யுவன் ஷங்கர் ராஜா இப்போது GOAT படத்துக்கு இசையமைத்திருக்கிறார். விஜய்யுடன் பல வருடங்களுக்கு பிறகு இணைந்து பணியாற்றுகிறார் யுவன். இதனால் பாடல்கள் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்போடுதான் படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகின. ஆனால் அத்தனையும் ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. ஆனால் படத்தில் யுவனின் இசை பட்டையை கிளப்பும் என்று அவரது ரசிகர்கள் உச்சபட்ச எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இருந்தாலும் யுவன் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டாரோ என்றும் குரல்கள் ஆங்காங்கே கேட்கின்றன.
யுவனின் பேச்சு: இந்நிலையில் பள்ளி விழா ஒன்றில் கலந்துகொண்டார் யுவன் ஷங்கர் ராஜா. அப்போது பேசிய அவர், "நான் ஆரம்பத்தில் இசையமைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் அனைத்துமே தோல்வியடையும் என்று முத்திரை குத்தினார்கள். அதனால் தனி அறையில் அமர்ந்து கதவை பூட்டிக்கொண்டு அழுதேன். அதற்கு பிறகு எங்கே தவறு நடக்கிறது என்று யோசித்தேன். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் இசையமைக்க தொடங்கினேன். முழு கவனம் செலுத்தி இசையமைத்தேன். அப்படி இசையமைத்துதான் இங்கு நிற்கிறேன்.
இதுதான் காரணம்: பேசுகிற வாய் பேசிக்கொண்டே இருக்கும். நாம் நடந்துகொண்டே இருக்க வேண்டும். எதையும் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் உங்களை வீழ்த்துவதற்கு முயன்றுகொண்டே இருப்பார்கள். ஆனால் அதற்கு நீங்கள் செவி சாய்க்கக்கூடாது. தலை நிமிர்ந்தபடி அனைத்தையும் கடந்து வர வேண்டும். இதனால்தான் இந்தத் துறையில் இத்தனை ஆண்டுகள் என்னால் நீடிக்க முடிகிறது.
காதுகள் மூடியே இருக்கும்: என்னை பற்றி வரும் கருத்துக்கள், பேச்சுக்கள், விமர்சனங்கள் என அத்தனையையும் என்னால் கேட்டுக்கொண்டே இருக்க முடியாது. அப்படி கேட்டுக்கொண்டிருந்தால் இத்தனை ஆண்டுகள் என்னால் பயணித்திருக்க முடியாது. எனது காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியேத்தான் இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டும்தான் எனது காதுகள் திறந்திருக்கும்" என்றார். யுவனின் இந்தப் பேச்சை கேட்ட ரசிகர்கள், அவரது இந்தப் பேச்சில் கோட் படத்தின் பாடல்களுக்கு விமர்சனம் செய்தவர்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறாரோ என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











