மறக்குமா நெஞ்சம்.. மக்கள் கோபத்திற்கு யார் காரணம்? ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்த யுவன்!
சென்னை : ஏ ஆர் ரகுமான் நடத்திய மறக்குமா நெஞ்சம் என்ற நிகழ்ச்சியில் பல குளறுபடிகள் நடந்ததையடுத்து ஏ ஆர் ரகுமானை ரசிகர்கள் கண்டபடி திட்டிவரும் நிலையில் யுவன் ஷங்கர் ராஜா அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி பனையூரில் ஆகஸ்ட் 12ம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால், மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

நிகழ்ச்சி செப்டம்பர் 10ந் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.
மறக்குமா நெஞ்சம்: இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த இடத்தில் இருந்து பலர் தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியில் வந்து ஏஆர் ரஹ்மானை கண்டபடி திட்டி தீர்த்தனர்.
இந்த முறை நான் பலி ஆடு: இந்த விவகாரம் பூதாகரமாகியதை அடுத்து, நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கான்சர்டை காண வந்த ரசிகர்களுக்கு இருக்கைகள் கிடைக்காமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தது. இதையடுத்து, ஏஆர் ரஹ்மான் இந்த முறை நான் பலி ஆடு ஆகிறேன் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.
யுவன் ஆதரவு: இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா, ஏஆர் ரஹ்மானுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதில், இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை ஒழுங்காக நடத்துவது என்பது மிகவும் சிரமமான வேலை. தேவையான உபகரணங்களை ஏற்றி இறக்குவது தொடங்கிக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, போக்குவரத்தைக் கண்காணிப்பது எனப் பல சவால்கள் இதில் இருக்கிறது.

நிர்வாக தவறு: கூட்டநெரிசல்கள் இதுபோன்ற இன்னல்கள் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற இத்தனை பெரிய நிகழ்வுகளில் நிகழ்வதுண்டு. நிர்வாகத் தவறுகள் தான் இதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன. எங்கள் இசையை அர்த்தமுள்ளதாக மாற்றும் எங்களது ரசிகர்களுக்கு பெரும் அவதியை அவை ஏற்படுத்திவிடுகின்றன.
தவறுகளை ஆராய வேண்டும்: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுகளை ஆராய வேண்டும். கலைஞர்களாகிய நாங்கள் மேடையில் இருக்கும்போது எல்லாமே சீராக நடக்கும் என்றும் எங்கள் ரசிகர்கள் நன்றாக இருப்பார்கள் என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது நம்பிக்கை வைக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழலுக்கு ரசிகர்கள் தள்ளப்படுவதைக் பார்க்கும் போது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கலைஞர்களாகிய எங்களை, இன்னும் ஒரு படி அதிகம் யோசிக்க வைத்துள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











