Ramani Ammal death: ஜீ தமிழ் பாடகி ரமணியம்மாள் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஏகப்பட்ட போட்டியாளர்களை வீழ்த்தி டைட்டிலையே தட்டித் தூக்கிய ரமணி பாட்டி காலமானார். அவருக்கு வயது 66.
வீட்டு வேலை செய்து வந்த ரமணியம்மாள் குரலில் உள்ள அந்த கான சக்தி அவரை ரியாலிட்டி ஷோவுக்கு கொண்டு வந்தது மட்டுமின்றி வெற்றிவாகையையும் சூட வைத்தது.
ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற ரமணியம்மாள் சில திரைப்பட பாடல்களை பாடி வந்த நிலையில், திடீரென உடல்நலக் குறைவு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாடகரான பாட்டி
பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பார்வையற்றவர்கள், வயதானவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டாலும், அது எல்லாமே நிகழ்ச்சியில் ரசிகர்களை கவரும் ஜிம்மிக்ஸ் வேலை தான் என்றும் பிக் பாஸ் வீட்டை போல சில வாரங்களில் அவர்களை வெளியே அனுப்பி விடுவார்கள் என விமர்சிக்கப்பட்ட நிலையில், தனது குரல் வளத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டு ரன்னர் அப் ஆனார் ரமணியம்மாள்.

43 ஆண்டுகள் வீட்டு வேலை
ரமணியம்மாள் கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு உழைத்து வந்ததாக ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், பாடகியாக மாறிய பின்னர் தனது உழைப்பால் சொந்தமாக வீடு கட்ட நிலம் ஒன்றையும் வாங்கி இருந்தார்.

சீக்கிரம் போய் விட்டாரே
2018ம் ஆண்டு ஜீ தமிழில் நடந்த இசைப் போட்டியில் கலந்து கொண்டு கடைசி வரை போட்டியிட்டு ரன்னர் அப் ஆன ரமணியம்மாள் சூர்யாவின் காப்பான் உள்ளிட்ட சில படங்களில் பாடல்களை பாடி அசத்தி வருகிறார். இந்நிலையில், பல சாதனைகளை செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த இசை உலகத்தை விட்டு சீக்கிரம் மறைந்து விட்டாரே ரமணியம்மாள் என பலரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ரசிகர்கள் இரங்கல்
ரமணியம்மாள் மறைவு இசை உலகத்தையும் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என ஆழ்ந்த இரங்கல்களை கூறி வருகின்றனர். திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இவ்வுலகை விட்டுப் பிரிந்து இசை உலகில் கலந்து விட்டார் ரமணியம்மாள்.

காத்தவராயன் முதல் காப்பான் வரை
2018ம் ஆண்டு கரண் நடித்த காத்தவராயன் படத்தில் இடம்பெற்ற காத்தவராய சாமி பாடலை பாடி பாடகராக அறிமுகமானாலும் அதன் பிறகு பாடும் வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. 2013ம் ஆண்டு ஹரிதாஸ் படத்திலும் இவர் ஒரு பாடலை பாடி உள்ளார். விஜய்சேதுபதி நடித்த ஜுங்கா படத்தின் ரைஸ் ஆஃப் ஜுங்கா பாடலுக்கு பிறகு தான் இவருக்கு சில படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. சண்டக்கோழி 2 படத்தின் செங்கரட்டன் பாறையிலே, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் இன்டர்நெட் பசங்க, சூர்யாவின் காப்பான் படத்தில் சிறுக்கி எனத் தொடங்கும் இன்ட்ரோ பாடல்களை இவர் பாடி அசத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











