GOT: சர் டங்கனும் புதுப்பேட்டை தனுஷும் ஒன்னுதான்.. சும்மா எல்லாம் இல்லைங்க.. பக்காவா பொருந்தி போகுது
சென்னை: கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற வெப் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். கேம் ஆஃப் த்ரோன்ஸின் முடிவு அதன் ரசிகர்களுக்கு தெரிந்தது தான் என்றாலும், அதன் முன் கதையை படமாக பார்க்க ரசிகர்களின் ஆர்வம் கொஞ்சம் கூட குறையவில்லை. அப்படி ஏற்கனவே வெளியான ஹவுஸ் ஆஃப் த டிராகன் இரண்டு சீசன்கள் முடிந்து, மூன்றாவது சீசன் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து, நைட் ஆஃப் தி செவன் கிங்டம்ஸ் (A Knight of the Seven Kingdoms)என்ற வெப் சீரீஸின் ஐந்து எபிசோட்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் இன்னும் ஒரு எபிசோட் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. அத்துடன் முதல் சீசன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் முதல் சீசனின் 5ஆவது எபிசோடைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் பலருக்கும் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்தின் காட்சி நினைவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக பலரும் பதிவிட்டு வந்த நிலையில், அது குறித்து கொஞ்சம் விரிவாக காணலாம்.
நைட் ஆஃப் தி செவன் கிங்டம்ஸைப் பொருத்தவரையில் அதன் மையக் கதாபாத்திரம் சர் டங்க் அதாவது சர் டங்கன். இந்த கதாபாத்திரம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரீஸிலேயே பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதேபோல் சர் டங்கன் உடன் பயணிக்கும் டார்கேரியன் அரச குடும்பத்தைச் சேர்ந்த எகான் டர்கேரியன் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. ஏகான் டார்கேரியனின் மகன் ஏரிஸ் டார்கேரியன் தான் கேம் ஆஃப் த்ரோன்ஸில் மேட் கிங் என்று குறிப்பிடப்படுகிறார். இவரது மகள் டெனேரியஸ் டார்கேரியன் தான் இறுதியாக மொத்த விண்டர்ஃபெல் நகரையும் அழித்து சூரையாடுகிறார்.

சண்டை காட்சி: நைட் ஆஃப் த செவன் கிங்டம்ஸ் முதல் சீசனின் 4ஆவது எபிசோடான செவன் என்ற எபிசோட் மொத்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரீஸிஸ் வெப் தொடர்களின் எபிசோட்களில் அதிக ரேட்டிங் பெற்றது. இப்படி இருக்கும்போது இந்த செவன் என்ற எபிசோடில் சர் டங்கனுக்காக டார்கேரியன் அரச குடும்பத்தைச் சேர்ந்த பேலர் டார்கேரியன் சண்டை செய்ய வருவார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாவலான ஐஸ் அண்ட் ஃபயர் நாவலில் கருப்பு நிற முடி கொண்ட டர்கேரியன்கள் பலரும் பெரும்பாலும் நியாயத்தின் பக்கமே நின்றுள்ளார்கள் என்பதையும் திரைக்கதையில் சிறப்பாக காட்டியிருப்பார்கள்.

புதுப்பேட்டை காட்சி: ஐந்தாவது எபிசோடான "In the Name of the Mother" என்ற எபிசோடானது, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை உருவாக்கி அதன் பின்னர் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை 100 சதவீதம் பூர்த்தி செய்தது என்றுதான் கூறவேண்டும். ராஜ குடும்பத்தை எதிர்த்து, ஒரு சாதாரண வீரன் தொடுக்கும் சண்டையில் சர் டங்கன் பெரும் காயமடைகிறார். பலத்த காயங்களுக்கு பின்னர் சர் டங்கன் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்பது புதுப்பேட்டை படத்தை தனுஷ் மூர்த்தி என்ற கதாபாத்திரத்திடம் சிக்கி அடி வாங்கி சின்னாபின்னமான பின்னரும் எழுந்து நிற்கும் காட்சியை போல இருப்பதாக கூறுகிறார்கள். ரசிகர்கள் இவ்வாறு கூறுவது பக்காவாக பொருந்திப் போகிறது. இந்த காட்சியை தமிழ் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











