50 வயதில் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க காத்திருக்கும் அப்பாஸ்.. துஷாரா விஜயன் கூடவா?
சென்னை: படையப்பா படத்தில் உங்களுக்கு வயசே ஆகலைன்னு ரஜினிகாந்தை பார்த்து சொன்ன அப்பாஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்தார். ஆனால், அங்கேயும் அவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
நடிகர் அப்பாஸ் மீண்டும் நடிக்க வரவேண்டும் என 90ஸ் கிட்ஸ் ஆர்வம் காட்டி வந்த நிலையில், வெப்சீரிஸ் ஒன்றில் மீண்டும் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பு அரக்கியாக மாறி வரும் துஷாரா விஜயன் உடன் இணைந்து அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓடிடி மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகியுள்ளனர். நடிகர் அப்பாஸ் மீண்டும் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
50வது பிறந்தநாள் வரப்போகுது: நடிகர் அப்பாஸ் வரும் மே 21ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்த ஆண்டு அவர் தமிழ் சினிமாவுடன் தனது பிறந்தநாளை மீண்டும் கோலாகலமாக கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அப்பாஸ். முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படம். அந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆல்பமாகவே உள்ளது.
ஹேண்ட்ஸம் ஹீரோ: விஐபி, பூச்சூடவா, படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், ஹே ராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம், காதல் வைரஸ், காதலுடன், பந்தா பரமசிவம், ஷாக், அடிதடி, சாது மிரண்டா, குரு என் ஆளு என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். செம ஹேண்ட்ஸமான அப்பாஸை பிடிக்காத இளம் பெண்களே அப்போது இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலரது ட்ரீம் பாயாகவே சினிமாவில் வலம் வந்தார்.
10 வருடங்களுக்குப் பிறகு: 2014ல் வெளியான ராமானுஜன் படத்தில் நடித்த அப்பாஸ் மலையாளத்தில் கடைசியாக 2015ம் ஆண்டு வெளியான பச்சகள்ளம் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த அப்பாஸ் தற்போது மீண்டும் ஓடிடி வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சற்குணம் இயக்கத்தில்: களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி, களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சற்குணம் அடுத்து துஷாரா விஜயன் நடிக்கும் வெப்சீரிஸ் ஒன்றை இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அப்பாஸ் நடிக்கப் போவதாக தற்போது லேட்டஸ்ட் அப்டேட்கள் கிடைத்துள்ளன. மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ் என்ட்ரி கொடுத்தால் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவருக்கு தேடி வரும் என்கின்றனர். வில்லனாகவும், முக்கியமான கதாபாத்திரங்களிலும் அவர் நடித்தால் நச்சென இருக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











