தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடிக்கு வரும் 'பாலன் தி பாய்'.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
சென்னை: 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில், கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் பாலன் தி பாய். ஆவேஷம், ரோமஞ்சம் ஆகிய படங்களின் புகழ்பெற்ற இயக்குநரான ஜித்து மாதவன் இப்படத்திற்குத் திரைக்கதை மற்றும் கதையை எழுதியுள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ஆதிசேஷன், கே.ஆர்.ஃபர்சானா, பாலதிங்கல், முஹம்மது ஜினான், டொவினோ தாமஸ், கிரிஷ் ஏ.டி, ஜீன் பால் லால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாலன் தி பாய்: பெண்கள் சிறையில் பிறக்கும் தனது மகன் பாலாவை பர்சானா சிறையிலேயே மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிறையில் இருந்து தனது மகனுடன்பர்சானா வெளியில் வருகிறார். வெளியுலக வாழ்க்கையில் தங்களுக்குச் சிறைப்பின்னணி இருப்பது தெரிந்தால் மகனை நிம்மதியாக வளர்க்க முடியாது என்பதை பர்சானா உணர்கிறார். இதனால், இருவரும் தங்களது பழைய அடையாளங்களை முழுமையாக மறைத்துவிட்டுப் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.

படத்தின் கதை: ஒரு வீட்டில் பர்சானாவிற்கு அங்கேயே தங்கி வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதை வைத்துத் தனது மகனை ஒரு பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கிறாள். ஆனால், அங்கும் அவர்களுக்கு எதிர்பாராத ஒரு சிக்கல் வர, மீண்டும் இருவரும் தங்களது இடத்தை மாற்றி வேறு ஒரு புதிய இடத்திற்குத் தப்பிச் செல்கின்றனர். உண்மையிலேயே பர்சானா யார்? தங்களது அடையாளங்களை முழுமையாக மறைத்து அவர்கள் வாழ வேண்டிய அவசியம் என்ன? பர்சானா சிறைக்குச் செல்ல என்ன காரணம்? போன்ற விறுவிறுப்பான கேள்விகளுக்குப் பதில் சொல்லும் எமோஷனல் த்ரில்லர் களம் தான் 'பாலன் தி பாய்' படத்தின் கதை.
ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், பாக்ஸ் ஆபீஸில் கணிசமான வசூலையும் அள்ளிய இத்திரைப்படம், வருகிற ஜூன் 31-ஆம் தேதி முதல் பிரபல ஜீ5 (ZEE5) ஓ.டி.டி. தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. இத்திரைப்படத்தைத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு முக்கியத் தென்னிந்திய மொழிகளில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம் என்ற அதிகாரப்பூர்வ தகவலைத் தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. தியேட்டர்களில் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கத் தவறிய சினிமா ரசிகர்கள், தாராளமாக ஓடிடியில் குடும்பத்தோடு பார்த்து மகிழலாம்.


Click it and Unblock the Notifications