Thalavan: சேட்டன்கள் செய்த தரமான சம்பவம்.. தலவன் படம் எப்படி இருக்கு? எந்த ஓடிடியில் ரிலீஸ் - விவரம்
கொச்சி: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தமிழ் படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் வேற்று மொழியில் நடிக்கும் கதாநாயகர்கள் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் கிடையாது. படம் நன்றாக இருந்தால் படத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். அதனால்தான் வேற்று மொழிகளில் சூப்பர் ஸ்டாராக உள்ள பல முன்னணி நடிகர்கள் நேரடி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து தமிழ் நாட்டில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளனர்.
கதாநாயகர்களையை கொண்டாடும் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடாமல் இருப்பார்களா?. அப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் வேற்று மொழிப் படங்களில் மலையாள சினிமாவுக்கு என்றைக்குமே முன்னுரிமை உள்ளது. மிகவும் எளிமையான கதை, அதற்கு நேர்த்தியான திரைக்கதை, பில்டப் இல்லாத காட்சிகள் என ஒரு கமர்சியல் படத்திற்குள் சிறந்த கலைப் படைப்பினைத் தந்து விடுவதில் மலையாள சினிமா கலைஞர்கள் பலரும் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

அண்மையில் வெளியான மஞ்மெல் பாய்ஸ், பிரமலு, கண்ணூர் ஸ்குவாட், ஆவேஷம் உள்ளிட்ட படங்களுக்கு தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு முன்னர் வெளியான கும்லாங்கி நைட்ஸ், ஜல்லிக்கட்டு, திர்ஷியம், பெங்களூரு டேஸ் உள்ளிட்ட பல படங்களையும் பட்டியலிட முடியும். தமிழ் மக்களிடையே மலையாளப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் மலையாள படங்களை தமிழ் நாட்டில் தமிழில் டப் செய்தோ அல்லது நேரடியாக மலையாளத்திலோ படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். மலையாளப் படங்ளுக்கு தியேட்டரிலேயே நல்ல வரவேற்பு கொடுக்கும் ரசிகர்கள் ஓடிடியியில் வெளியானால் சும்மா விடுவார்களா? சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து படைக்கப்போகும் அடுத்த படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.
தலவன்: தலவன் படம். கடந்த மே மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆனது. இப்படம் திரையரங்கில் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படம் தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது. படம் தியேட்டரில் ரூபாய் 25 கோடிகளை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காளி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. படத்தில் ஆசிஃப் அலி மற்றும் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் கதை: ஒரு போலீஸ் ஸ்டேசனில் இருக்கும் உயர் அதிகாரிக்கும் அவருக்கு கீழ் வேலை செய்யும் மற்றொரு அதிகாரிக்கும் இடையிலான ஈகோ பிரச்னையாக படம் தொடங்குகின்றது. இந்தக் காட்சிகளே படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஈர்ப்பினை ஏற்படுத்திவிடுகின்றது. படம் தொடங்கி 40 நிமிடங்களில் படத்தின் கதை வேறு ஒரு தளத்திற்கு நகர்கின்றது. அதில் இருந்து படத்தின் க்ளைமேக்ஸ் வரை விறுவிறுப்பு, ட்விஸ்ட் அண்ட் டர்ன் காட்சிகள்தான். ஒரு கட்டத்திற்கு மேல், ஈகோ பிரச்னையை ஓரம்கட்டிவிட்டு இருவரும் இணைந்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்ப்பார்கள்.
ட்விஸ்ட்: ஒரு காட்சி கூட தேவையில்லாத காட்சி எனக் கூற முடியாது. பல காட்சிகளில் நமக்கே திக் திக் மனநிலையை உருவாக்கி விடுவார்கள். படத்தில் கதாநாயகி இல்லை. தேவையில்லாத பாடல் காட்சிகள் இல்லை. ஆனால் படம் முழுக்க விறுவிறுப்புதான். படம் முடியும்போதும் செம ட்விஸ்ட் இருக்கும். படம் பார்த்து முடிக்கும்போது ஒரு திருப்தியான படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தும். இது போன்ற படங்களுக்கும் இரண்டாவது பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என படம் பார்த்தவர்கள் பேசிக்கொள்கின்றார்கள்.


Click it and Unblock the Notifications











