காட்டில் இருந்தாலும் பர்கர் வேண்டும்.. ஓடிடி கெடுத்துவிட்டது.. அனுராக் காஷ்யப் என்ன இப்படி சொல்றாரு?
மும்பை: அனுராக் காஷ்யப் இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநர். Paanch என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் Black Friday, Dev D,கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், கென்னடி உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார். அவரது இயக்கத்துக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஓடிடி குறித்தும், ஹீரோக்கள் குறித்தும் பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார். அது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ஓடிடி தளங்களில் வளர்ச்சி இந்தியாவில் அசுர வேகத்தில் இருக்கின்றன. தியேட்டருக்கு படம் இயக்குவது போல் ஓடிடிக்களுக்காகவும் பிரபல இயக்குநர்கள் வெப் சீரிஸ்கள், படங்களை இயக்கிவருகின்றனர். ரசிகர்களும் அவைகளுக்கு அமோக வரவேற்பை கொடுத்துவருகின்றனர். அதேபோல் தியேட்டரில் படம் ரிலீஸானாலும் அங்கு சென்று பார்க்காமல் ஓடிடியில் வரும்வரைக்கும் அதற்காக காத்திருக்கும் ஒருதரப்பு ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அனுராக் பேட்டி: இந்நிலையில் அனுராக் காஷ்யப் ஓடிடி குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சினிமாவில் தேவையில்லாத செலவுகள் எல்லாம் ஓடிடி தளங்களின் வருகைக்கு பிறகு அதிகரித்திருக்கின்றன. அந்தப் பணத்தை அந்தப் படத்துக்காக யாரும் செலவு செய்வதில்லை. முதலில் ஒரு படம் எடுக்கும்போது ஒரு கதையைத்தான் நாம் பாமாக எடுக்க வேலை செய்கிறோம். யாரும் சுற்றுலாவுக்கோ, பிக்னிக்கிற்கோ செல்லவில்லை என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.
காட்டில் இருந்தாலும் பர்கர்: நீங்கள் ஒரு காட்டில் ஒரு படம்பிடித்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் ஒரு நடிகருக்கு பிடித்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கும் பர்கர் வாங்குவதற்காக ஒரு கார் மூன்று மணி நேரம் பயணம் செய்து செல்லும். நெட்ஃப்ளிக்ஸுக்காக நான் சேக்ரட் கேம்ஸ் இயக்கினேன். அப்போது ஒரு படத்தின் செட்டில் அத்தனை கேரவன்களை நான் பார்த்ததே இல்லை. ஓடிடி தளங்களின் வருகை நிறைய விஷயங்களை கெடுத்துவிட்டது என்பதுதான் உண்மை.
அதை மறுக்கவில்லை: ஒரு படத்தில் வேலை செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் கவனம் பெறுகிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் நடிகர்கள் தங்களது தேவைகளை பல மடங்கு உயர்த்திவிட்டார்கள். இந்த நிலையில் இருந்து மீண்டு நாம் சிக்கனமான முறையை பின்பற்றுவது ரொம்ப கஷ்டம். சமூக வலைதளங்கள்தான் அனைவரது மனநிலையை கெடுப்பது முக்கிய குற்றவாளி. இன்று ரசிகர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவருக்கும் பாக்ஸ் ஆபிஸ் பற்றிதான் கவலை.
யாரும் தயாராக இல்லை: நான் ஒரு நடிகரிடம் கதை சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கதை அவருக்கு பிடித்திருந்தாலும் அதில் நடிப்பதற்கு அவர் சம்மதிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் அந்த படத்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதைத்தான் முதலில் யோசிக்கிறார்கள். அதனால்தான் சொல்கிறேன் புதுவிதமான கதைகளில் நடிப்பதற்கு யாரும் தயாராக இல்லை"" என்று ஓபனாக பேசியிருக்கிறார்.
அனுராக் காஷ்யப்: Paanch படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனுராக் காஷ்யப். அதன் பிறகு அவர் இயக்கிய நோ ஸ்மோக்கிங், ரிட்டர்ன் ஆஃப் ஹனுமான், தேவ் டி உள்ளிட்ட படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவர் இயக்கியதிலேயே பெஞ்ச் மார்க்காக கருதப்படுவது கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் திரைப்படம். அந்தத் திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்க்க சிறந்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார் அனுராக். கடைசியாக அவரது இயக்கத்தில் கென்னடி திரைப்படம் வெளியானது.


Click it and Unblock the Notifications











