Nandhan OTT: பாராட்டுகளைக் குவித்த சசிகுமாரின் நந்தன்.. ஓடிடியில் ரிலீஸ்
சென்னை: இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான படம் நந்தன். படத்தில் கதையின் நாயகனாக சசிகுமார் நடித்துள்ளார். சரவணன் ஏற்கனவே கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். படத்தில் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் எதிர்கொள்ளும் சாதிய வன்கொடுமைகள் குறித்து உண்மைக்கு நெருக்கமாக படமாக்கியுள்ளார். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சசிக்குமாருடன் பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படம் பார்த்த பலரும் படக்குழுவினரை வாழ்த்தி வந்தனர். இந்நிலையில் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.
நந்தன் படம் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பஞ்சாயத்து தலைவர்களாக இருப்போர் சமகாலத்தில் சந்தித்து வரும் சாதிய கொடுமைகள் குறித்து தெள்ளத்தெளிவாக அப்பட்டமாக பேசுகின்றது. படத்தில் ஒரு காட்சியில் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது. செய்தியாளர் சந்திப்பில், அவரது ஆட்சியிலும் இந்த நிலை தொடர்கின்றது என தைரியமாக பேசினார்.

படத்தினைப் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “ நந்தன் படம் இன்றைக்கு நாடெங்கிலும் பேசப்படுகின்ற முக்கியமான பிரச்னையை மைய்யமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் எந்த அளவுக்கு சாதியம் தலைவிரித்து ஆடுகின்றது, எளிய மக்கள் எந்த அளவுக்கு ஒடுக்கப்படுகின்றார்கள், குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி மன்றத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அந்த இருக்கைகளில் அமர முடிவதில்லை.
தலை நிமிர்வு: தனது எஜமானுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும் அவன் கொஞ்சம் கூட தலை நிமிரக்கூடாது எனும் அளவிற்கு சாதி வெறி, இதனை இயக்குநர் மிகவும் ஆளமாக பதிவு செய்துள்ளார். சமுத்திரக்கனி மிகச் சிறப்பாக இட ஒதுக்கீட்டுக்கான பின்னணியை எடுத்துச் சொல்கின்றார். மாரிமுத்துவும் அம்பேத்குமாரும் இணைந்த புள்ளி ஒரு சமூகத்தின் தலைநிமிர்வுக்கான அடையாளமாக உள்ளது” எனக் குறிப்பிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

சிவகார்த்திகேயன்: அதேபோல் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “ டத்தில் சசிக்குமார் அண்ணன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என நினைத்துக் கொண்டுதான் படம் பார்க்கச் சென்றேன். படம் எப்படியும் ராவாக இருக்கப்போகின்றது என நினைத்தேன். படத்தின் முதல் காட்சியிலேயே இயக்குநர் ரா. சரவணன் என்னை பிரமிப்பில் ஆழ்த்திவிட்டார். எனக்கு இருக்கும் சினிமா அறிவுக்கு இந்தப் படத்தின் முதல் காட்சி பிரமிப்புதான். அதன் பின்னர் சசிக்குமார் அண்ணன் தனது வெள்ளந்தியான நடிப்பில் என்னை மேலும் பிரமிக்க வைத்துவிட்டார்.
ஓடிடி: படம் ராவாக இருக்கும் என எனக்குத் தெரியும். ஆனால் உண்மை இவ்வளவு நெருக்கமாக படம் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. படம் பார்த்தப்ப நிறைய இடத்தில் சிரிச்சேன். நிறைய இடத்தில் யோசிச்சேன். நிறைய இடத்தில் கண் கலங்கினேன். கடைசியா வேகமா கைத்தட்டினேன். இது எல்லாவற்றையும் ஏற்படுத்தியது இரா. சரவணனின் எழுத்தும் மேக்கிங்கும்தான். நந்தன் அருமையான படைப்பு” என பாராட்டினார். இவ்வாறு ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரது பாராட்டைப் பெற்ற நந்தன் படம் அமேசான் ஓடிடி தளத்தில் இன்று முதல் அதாவது அக்டோபர் 12ஆம் தேதியில் இருந்து ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. மேலும் இந்தியா அளவில் இப்படம் டாப் 6வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











