Chutney Sambar Review: யோகி பாபுவின் சட்னி சாம்பார் ருசி எப்படி இருக்கு? வெந்தது யார் பருப்பு?
சென்னை: யோகி பாபு, கயல் சந்திரன், வாணி போஜன், மைனா நந்தினி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் பெயர் சட்னி சாம்பார். இந்த வெப் சீரிஸை இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ளார். ஹாட் ஸ்டார் தமிழ் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் இன்று முதல் அதாவது ஜூலை 27ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது. மொத்தம் 6 எப்பிசோட்களாக இந்த வெப் சீரிஸ் வெளியிடப்பட்டுள்ளது. காமெடி கலந்த செண்டிமெண்ட் டிராமாவாக இந்த வெப் சீரீஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த வெப் சீரிஸை தயாரித்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. இந்த வெப் சீரிஸ்க்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குனர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.

கதை: ஊட்டியில் உணவகம் நடத்தி வரும் நிழல்கள் ரவி குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். தான் இறக்கப்போகின்றேன் என தெரிந்ததும் தனது மகன் சந்திரனை அழைத்து, இளம் வயதில் தான் ஒரு பெண்ணுடன் சென்னையில் வாழ்ந்து வந்ததாகவும் அதன் பின்னர் சில காரணங்களால் அவரைப் பிரிய நேர்ந்தது. தற்போதுதான் அவருக்கு ஒரு மகன் இருப்பது எனக்கு தெரிந்தது. அந்த மகன் எனக்கு பிறந்தவன். அவனை அழைத்து வந்து எனது இறுதிச் சடங்குகளைச் செய்யவேண்டும் என ரகசியமாக கூறுகின்றார். இதனால் தனது அண்ணனைத் தேடி அதாவது யோகி பாபுவைத் தேடி சென்னைக்கு வந்து அவரை வழுக்கட்டாயமாக ஊட்டிக்கு கடத்தி வந்து தனது தந்தைக்கு இறுதிச் சடங்குகளைச் செய்கின்றார். சம்பந்தமே இல்லாத ஒருவர் வந்து இறுதிச் சடங்குகளைச் செய்வது குடும்பத்தில் பிரச்னையைக் கொண்டு வருகின்றது. இறுதியில் இந்த பிரச்னை எவ்வாறு தீர்ந்தது என்பது மீதிக்கதை.

எப்படி இருக்கு?: காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளால் ரசிகர்களை திருப்தி படுத்த முயற்சி எடுத்துள்ளார் இயக்குநர். ஆனால் செண்டிமெண்ட் சீன்கள் எடுபட்ட அளவுக்கு கூட காமெடி சீன்கள் பெரிதாக எடுபடவில்லை. பெரும்பான்மையான காமெடிகள் மிகவும் தட்டையாகவே (ஃப்லாட்டாகவே) உள்ளது. பல கதாபாத்திரங்களுக்கு இருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்க வைக்கின்றது. வெஃப் சீரிஸாகவே தன்னிடம் இருக்கும் கதையை எடுக்க ராதா மோகன் நினைத்தாரோ என்னவோ, பல காட்சிகளை கதையில் தாக்கத்தினை ஏற்படுத்தாது எனத் தெரிந்துமே சேர்த்துள்ளார். குடும்பத்துடன் அமர்ந்து கட்டாயம் ஒரு முறை பார்ப்பதற்கான கண்டெண்ட்டை கொடுக்கவும் முயற்சி செய்துள்ளார்.

இசை மற்றும் கேமரா: இந்த வெப் சீரிஸுக்கு பலம் சேர்க்கும் விதமாக இசையைக் கொடுத்துள்ளார். அதேபோல் கதை முழுக்க முழுக்க ஊட்டியில் நடப்பதால் பிரசன்னா குமார் தனது கேமராவினால் ஊட்டியை நமக்கு சிறப்பாகவே சுற்றிக்காட்டுகின்றார். மொத்தத்தில் இந்த வெப் சீரிஸ் நகைச்சுவைக்காக ரசிகர்களிடம் பாராட்டைப் பெறவில்லை என்றாலும் செண்டிமெண்ட் காட்சிகளுக்காக பாராட்டைப் பெற வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications











