Manjummel Boys OTT Release: வசூல் வேட்டை நடத்திய மஞ்சும்மல் பாய்ஸ்..ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: கொடைக்கானலில் குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ். கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படம் மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழிலும் அமோக வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஓடிடியிலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
மலையாளத் திரைப்படங்கள் ஆண்டு தோறும் ஏதோ ஒரு வித்தியாசமான கதையை கொடுத்து தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைத்து விடுவார்கள். இதனால், மலையாள திரைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அந்த வகையில், பிரேமம், ஹிருதயம்,2018, மின்னல் முரளி, க்ரூப், ஐயப்பனும் கோஷியும் என பல மலையாளத் திரைப்படங்கள் தமிழகத்தில் வெற்றி பெற்று வசூலை அள்ளின.

மஞ்சும்மல் பாய்ஸ்: இந்த வரிசையில் மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் 11 பேர் கொண்ட நண்பர்கள், குணா குகையை சுற்றிப்பார்க்க தடுப்பு வேலிகளை கடந்து செல்கிறார்கள். குணா குகையின் அழகை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கும் போது, சுபாஷ் என்பவர் குழி ஒன்றில் தவறி விழுந்து விடுகிறார். இதனால் பதறிப்போகும் நண்பர்கள் அவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட, அங்கு வரும் காவல் துறையினர். இந்த குழியில் விழுந்தவன் யாரும் பிழைச்சது இல்லை என்று சொன்ன போதும், நண்பர்கள், விடாபிடியாக இருந்து நண்பனுக்கான தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பல அடி ஆழ குழிக்குள் இறங்கி நண்பனை மீட்பது தான் இந்த படத்தின் கதை.
உணர்வுபூர்வமான கதை: இயக்குநர் இந்த கதையை எதார்த்தமாக மேம்போக்காக சொல்லி இருந்தால், இந்த படம் வெற்றி பெற வாய்ப்பு இருந்து இருக்காது. இந்த கதையை உணர்வுபூர்வமாக சொல்லி வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர் சிதம்பரம். இந்த படத்தின் ஒரு காட்சியில், குழியில் நண்பன் விழந்த போது, திடீரென மழை வர, அந்த குழிக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது, தனது நண்பனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்பதற்காக அந்த குழியை மறைத்துக்கொண்டு இருந்த காட்சியே, அவர்கள் நண்பன் மீது வைத்திருந்த பாசத்தின் உச்சமாக இருந்தது.
கண்மணி அன்போடு காதலன்: மலையாள படத்தில் 60% தமிழ் பேசுவது மட்டுமல்லாமல், இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பது போல இருந்ததாலும், குறிப்பாக உலகநாயகன் கமலஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் இடம் பெற்று இருந்ததால், இந்த படம் தமிழ் நாட்டில் சக்கைப்போடு போட்டது. இந்த படம் பார்த்த உலக நாயகன் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிம்பு என அனைவரும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.
ஓடிடியில்: குணா குகையில் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில், சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியான இந்த படத்தை எந்த ஓடிடி தளமும் வாங்க முன்வரவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஏப்ரல் 5ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











