ஹீரோ சகோதரியுடன் ரூமுக்குள் போகும் வில்லன்.. இந்த சீன் தேவையா? கவனிக்குமா கனா காணும் காலங்கள் டீம்!
சென்னை: ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் வெப்சீரிசில் இடம் பெற்ற ஒரு காட்சி சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. காஞ்சிபுரத்திலுள்ள சிறகுகள் பள்ளிக்கூடம் சந்திக்கும் பிரச்சினைகள், சிறகுகள் பள்ளியின் மாணவ, மாணவிகளின் நட்பு, காதல், பகை ஆகியவை அடிப்படையில், இந்த சீரிசின் பெயருக்கு ஏற்றவாரு, ஏகப்பட்ட காமெடி காட்சிகளுடன், இளைஞர்களின் மற்றும் 90ஸ் கிட்சின் ஏகோபித்த வரவேற்பு, கனா காணும் காலங்களுக்கு உண்டு. 2006 முதல் 2009ம் ஆண்டுவரை விஜய் டிவியில் இதே பெயரில் ஒளிபரப்பான சீரிசுக்கு கிடைத்ததை போலவே ஹாட்ஸ்டார் சீரிசுக்கும் வரவேற்பு உள்ளது.
ராஜா வெற்றி பிரபு, தீபிகா வெங்கடாச்சலம், அரவிந்த் செய்ஜு, அக்ஷதா அஜித், பர்வேஷ் முஷரப், தேஜா வெங்கடேஷ், திடியன் (நண்பர்களே குழந்தை), விஜே சங்கீதா, கீர்த்தன் சுபாஷ், பரத் கல்யாண், தீபிகா தாமு உட்பட பலரின் பட்டையை கிளப்பும் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் 2 சீசன்களாக வெளியானது.

மனசு லேசாக வேண்டும் என்று நினைப்பவர்களின் முதல் சாய்சாக, கனா காணும் காலங்கள் உள்ளது. இதற்கு காரணம், கவுதம் மற்றும் கலை ஆகியோர் தலைமையில் ஒரே வகுப்பில் இரு கோஷ்டி இருப்பதும், அந்த கோஷ்டியின் சின்ன உரசல்களும், அவர்களின் காமெடிகளும்தான். ஆனால் இந்த வெப்சீரிசில் இடம்பெற்ற ஒரு காட்சி சர்ச்சைக்குரியதாகவும், தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய காட்சியாகவும் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கனா காணும் காலங்கள் சீரிசில் கலை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த் செய்ஜு சொல்லும் பிளாஷ்பேக் காட்சி பற்றியதுதான் அது. வில்லன்களால் தனது குடும்பம் எப்படி பாதிக்கப்பட்டது என்பதை தனது காதலி அபியிடம் கலை சொல்லும் காட்சியில், கலையின் சகோதரி வில்லனால் பலாத்காரம் செய்யப்படுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. கடைசியாக இதுபோன்ற பலாத்கார காட்சியை பருத்திவீரன் படத்தில்தான் மக்கள் பார்த்திருப்பார்கள்.

சமீபத்திய எந்த படத்திலும் பலாத்கார காட்சிகளை வைக்காமல் கண்ணியம் காத்துவருகிறது தமிழ் சினி உலகம். ஆனால் வீட்டுக்குள்ளேயே, அதுவும் பதின்ம வயது இளசுகளால் அதிகம் பார்க்கப்படும் ஒரு சீரியலில் இதுபோன்ற காட்சி தேவையற்றது என்ற விமர்சனங்கள் எழாமல் இல்லை.

அதிலும், அறையை பூட்டிவிட்டு பலாத்காரம் செய்துவிட்டு வெளியே வரும் வில்லனிடம், அவரது அண்ணன் வில்லன் பாத்திரம், "ஏன் இவ்ளோ தாமதம்.." என்று கேட்பதும், அதற்கு பலாத்காரம் செய்த வில்லன் அளித்த பதிலும் முகம் சுளிக்க வைத்தது. இதேபோலத்தான், அந்த அண்ணன் கதாப்பாத்திரம், சிறகுகள் பள்ளியின் அட்மினாக வரும் பெண் கதாப்பாத்திரத்தை பற்றி வர்ணிப்பது கூட இருந்தது. இத்தனைக்கும் அட்மின் பெண் கதைப்படி திருமணமானவர்.
இதுபோன்ற காட்சிகளை திரை இயக்குநர்களாகட்டும், சின்னத்திரை இயக்குநர்களாகட்டும் வருங்காலங்களில் தவிர்ப்பது நன்மை பயக்கும். மற்றபடி, மாணவ, மாணவிகள் வரும் காட்சிகள் அனைத்தும் மனசை லேசாக்கும் ரகம்தான் என்பதால், சிரிக்கவும், உங்கள் பால்யத்தை அசைபோடவும், கனாக்காணும் காலங்கள் உங்களுக்கு உதவியாகத்தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இதனிடையே, kana kanum kalangal season 3 release date எப்போ என்று ரசிகர்கள் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார்கள். கனா காணும் காலங்கள் சீசன் 3 வெளியாகும்போது இயக்குநர் மேற்குறிப்பிட்ட விமர்சனங்கள் இல்லாமல் சுத்தமான சரக்காக களமிறக்குவார் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











