தொடை அழகி ரம்பாவின் பாடலால் அடிபொலியான மலையாளப் படம்! மஞ்சுமெல் பாய்ஸ் பாணியில் அடுத்த ஹிட்!
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக மலையாள சினிமாவைப் பார்த்து வந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமாவை அதிகம் பார்ப்பதுடன், மலையாள சினிமாக்கள் குறித்த விவாதத்தை ரசிகர்கள் வட்டத்தில் இருந்து தயாரிப்பாளர்கள் வட்டம் வரை கொண்டுவந்து விட்டனர். இதற்கு முக்கிய காரணம் ஓ.டி.டி., தளங்கள்தான். ஓ.டி.டி., தளங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற பின்னர் உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை அனைத்தையும் பார்த்து ரசித்து வருகின்றனர். அண்மையில் லால்பட்ட லேடீஸ் படம் ஹிந்தியில் வெளியாகி இருந்தாலும், ஓ.டி.டி., தளத்தில் வெளியான பின்னர் தமிழ் நாட்டிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இதற்கு முன்னர் மலையாளத்தில் வெளியான பிரேமலு மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு தமிழ் நாட்டில் கிடைத்த வரவேற்பு என்பது தமிழ் சினிமாத்துறையினரே எதிர்பார்க்காத ஒன்று. இதில் மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழ் சினிமா ரசிகர்களுடன் அதிகம் கனெக்ட் ஆக காரணங்களில் முக்கியமானவை என்றால் அது, கொடைக்கானல் மற்றும் குணா படத்தில் இடம்பெற்ற பாடலான கண்மணி அன்போடு காதலன் பாடல்தான். இந்த பாடலை மட்டுமே வைத்து இந்த படம் தியேட்டரில் வசூல் வேட்டை நடத்தியது மட்டும் இல்லாமல், மலையாள சினிமாவில் ரூபாய் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.

இந்தப் படத்தைப் போலவே, மற்றொரு தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் பாடலை படத்தில் இடம் பெறச் செய்து, மலையாளத்தில் ஹிட் அடித்த படம்தான் குருவாயூர் அம்பலநடையில். விபின் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிருத்திவிராஜ் சுகுமாறன், பாசில் ஜோசப், நிகிலா விமல் மற்றும் அனஸ்வர ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இந்த படத்தில்தான் யோகிபாபு மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

படத்தின் கதை: இந்த படத்தினை பிருத்திவிராஜ் எண்டர்டைமெண்ட் 4 நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். படம் கடந்த மே 16ஆம் தேதி வெளியானது. படத்தின் கதை என்னவென்றால், அனஸ்வர ராஜனுக்கு துபாயில் வேலையில் இருக்கும் பாசில் ஜோசப்பை திருமணம் செய்து வைக்க இரண்டு குடும்பத்தினரும் முடிவெடுக்கின்றனர். இதில் அனஸ்வர ராஜனின் அண்ணனாக வரும் பிருத்திவிராஜ்க்கும் பாசில் ஜோசப்புகும் இடையே நல்ல பிணைப்பு ஏற்படுகின்றது. பாசில் ஜோசப்பின் அழுத்தத்தின்பேரில் பிரிந்து சென்ற தனது மனைவி நிகிலா விமலை அழைத்து வருகின்றார் பிருத்திவிராஜ். துபாயில் இருந்து வந்த பாசில் ஜோசப், நிகிலா விமலைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகின்றார். அதற்கு காரணம் நிகிலா விமல், பாசில் ஜோசப்பின் முன்னாள் காதலி என்பதுதான்.

பரபரப்பான க்ளைமேக்ஸ்: இதனால் தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்த பாசில் போராட, ஒரு கட்டத்தில் பிருத்விராஜ்க்கு உண்மை தெரியவே, அவர் இந்த திருமணத்தை நிறுத்த முயற்சி செய்கின்றார். ஆனால் அப்போது பாசில் இந்த திருமணத்தை கட்டாயம் நடத்தியே தீருவேன் என உறுதியாக இருக்கின்றார். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதி கதை.

ஓடிடி தளம்: படத்தின் ஆரம்பக் காட்சியில் இருந்து இறுதிக் காட்சிவரை காமெடிதான். பல இடங்களில் டார்க் காமெடி நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகியுள்ளது. யோகிபாபு சில காட்சிகளில் வந்தாலும் கலக்குகின்றார். தொடை அழகி ரம்பாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்ற உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இடம்பெற்ற பாடலான, அழகிய லைலா பாடல் வரும் காட்சி எல்லாம் அடிபொலிதான். படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. வயிறு வலிக்க சிரிக்க நினைப்பவர்களுக்கு இந்த படத்தில் சம்பவம் இருக்கு.


Click it and Unblock the Notifications











