Honeymoon Photographer OTT Review: ஹனிமூன் போட்டோகிராஃபர் சீரிஸ் பார்த்தீங்களா?.. தமிழ்ல இருக்கு!
சென்னை: நெட்ஃபிளிக்ஸ், ஜியோ சினிமா, அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் என பல ஓடிடி நிறுவனங்கள் ஆங்கில படங்களையும் இந்தி வெப்சீரிஸ்களையும் தமிழ் ரசிகர்களுக்காகவும் டப் செய்து கொடுத்து வருகின்றனர். தமிழில் இந்த வாரம் சிறப்பான படங்கள் ஏதும் வெளியாகவில்லையே என போரடித்தால் உடனடியாக தமிழில் டப் ஆகியுள்ள வேற்று மொழியில் உருவாக்கப்பட்ட படங்களை தேடி ஓடிடி ரசிகர்கள் ஓட ஆரம்பித்து விடுகின்றனர்.
மாலத்தீவுக்கு நடிகைகள் எல்லாம் சுற்றுலா சென்று பிகினி போட்டோக்களாக எடுத்து போட்டு தாக்குவதை பார்த்திருக்கிறோம். மாலத்தீவுக்கு ஹனிமூன் செல்லும் ஒரு கோடீஸ்வர ஜோடி தங்களுடன் ஒரு பெண் புகைப்படக் கலைஞரை ஹனிமூன் போட்டோகிராஃபராக கொண்டு செல்வதும் அங்கே மருந்து கம்பெனி ஓனரின் மகனான மாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து விட அந்த பழி அந்த போட்டோகிராஃபர் பெண் மீது விழ அந்த கொலையை செய்தது யார்? என்கிற கேள்வியுடன் இந்த ஓடிடி வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் ஸ்ரீவத்சவா இயக்கத்தில் அஷா நேகி (ஹனிமூன் போட்டோகிராஃபர்), சாஹில் சலாதியா(அதிர்), அபெக்ஷா போர்வால் (ஜோயா) உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள 6 எபிசோடு சீரிஸை ஜியோ டிவி ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் காணலாம். இந்த வெப்சீரிஸ் நல்லா இருக்கா? இல்லையா? யாரெல்லாம் பார்க்கலாம் என்பது தொடர்பான முழு விமர்சனத்தை இங்கே காணலாம்.
ஹனிமூன் போட்டோகிராஃபர் கதை: பிரபல மருந்து கம்பெனி ஓனரின் ஒரே வாரிசான அதிர் என்பவருக்கும் ஜோயா என்பவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. அந்த திருமணத்தை புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர் அம்பிகாவை மாலத்தீவுக்கு ஹனிமூன் செல்லும் அந்த கோடீஸ்வர ஜோடி விமானத்தில் அழைத்து செல்கின்றனர். திடீரென ஒரு நாள் காலையில் பீச் மணலில் பிணமாக புதைந்து கிடக்கிறார் அதிர். அவரது கொலைக்கு யார் காரணம் என்கிற விசாரணையில் சிக்கும் புகைப்படக் கலைஞர் அம்பிகா அதிலிருந்து தப்பித்தாரா? இல்லையா? நிஜ குற்றவாளி யார்? என்பது தான் இந்த கதை.

வெப்சீரிஸ் எப்படி இருக்கு?: அதீருக்கும் அம்பிகாவுக்கும் ஏற்கனவே கனெக்ஷன் இருப்பதாக காட்டுகின்றனர். அதீருக்கு திருமணம் ஆன நிலையில், இதெல்லாம் வேண்டாம் என எச்சரிக்கிறார் அம்பிகா. ஆனால், ஹனிமூனுக்கு மனைவியுடன் வரும் அதீர் அர்த்த ராத்திரியில் ஜோயாவை தனியாக தூங்க விட்டு அம்பிகாவின் அறைக்கு வருகிறார். அடுத்த நாள் காலையில் அம்பிகாவுக்கு தலையில் அடிபட்டு இருக்கிறது. ஆனால், அங்கே என்ன நடந்தது என்பதே அவருக்கு தெரியவில்லை. கடைசியாக அம்பிகா அதிகாலை 3 மணிக்கு மேல் அதீரை தனது அறைக்கு வரச்சொன்ன மெசேஜ் மட்டுமே அவருக்கு தெரிகிறது.
ஆரம்பத்தில் மாலத்தீவில் ஓவர் குடியில் கடலில் மூழ்கி இறந்து விட்டார் அதீர் என்றே மாலத்தீவு போலீஸார் வழக்கை முடித்து உடலை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர். அதீர் அப்படி இறக்கக் கூடிய ஆள் இல்லை என அவனது அம்மா போஸ்ட்மார்ட்டம் செய்ய சொல்ல அதன் பின்னர் தான் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. ஆரம்பத்தில் அம்பிகா, ஜோயா எல்லாம் விசாரணைக்கு ஒத்துழைக்கின்றனர். ஆனால், அம்பிகாவை இதில் வசமாக ஃபிரேம் செய்திருப்பது அவருக்குத் தெரிய வர போலீஸாரிடம் இருந்து தப்பிக்கிறார்.

அதீரின் மனைவி ஜோயா தான் தனது பாய் ஃபிரெண்டுடன் இணைந்துக் கொண்டு அதீரை கொன்று பழியை தன் மீது போட்டு விட்டார் என அம்பிகா நினைக்கும் இடத்தில் இன்னொரு ட்விஸ்ட் என கதை பிரெடிக்ட் பண்ண முடிந்தாலும் போரடிக்காமல் கொஞ்சம் விறுவிறுப்புடன் நகர்கிறது. கடைசியில் நிஜ கொலைகாரர் யார் என்பதை கண்டுபிடிப்பதும், எதற்காக அதீர் கொலை செய்யப்பட்டான் என்பதும் ரிவீல் ஆகிறது.
பார்க்கலாமா? வேண்டாமா?: அம்பிகாவாக நடித்துள்ள ஆஷா நேகியின் நடிப்புக்காகவே இந்த வெப்சீரிஸை பார்க்கலாம். ஓடிடியில் உள்ள த்ரில்லர் வெப்சீரிஸுக்கு இணையாக எல்லாம் இருக்காது. பாலிவுட் சீரியல் எஃபெட் தான் இருக்கும். ஆனால், கேமரா வொர்க், லொகேஷன், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைகக்தை உள்ளிட்டவற்றை ஒருமுறை காணலாம். தமிழில் இருப்பதால் கோலிவுட் ரசிகர்களும் இப்படியெல்லாம் கூட வேலை இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளவும் மாலத்தீவை சுற்றிப் பார்த்த எஃபெக்டை அடையவும் இந்த வெப்சீரிஸை பார்க்கலாம். இன்னமும் கொஞ்சம் ட்விஸ்ட்டான காட்சிகளை சுவாரஸ்யப்படுத்தி இருந்தால் சிறந்த வெப்சீரிஸாக வந்திருக்கும்.


Click it and Unblock the Notifications











