Kannur Squad Review: பரபரக்கும் ஆக்ஷன் த்ரில்லர்... மம்முட்டியின் கண்ணூர் ஸ்குவாட் ஓடிடி விமர்சனம்
சென்னை: மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸானது.
ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தமிழில் சூப்பர் ஹிட் அடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் சாயலில் மலையாளத்தில் உருவாகியுள்ளது கண்ணூர் ஸ்குவாட்.
இன்வெஸ்டிகேஷன் ப்ளஸ் ஆக்ஷன் த்ரில்லரில் மாஸ் காட்டிய கண்ணூர் ஸ்குவாட், தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

கண்ணூர் ஸ்குவாட் ஓடிடி விமர்சனம்: கார்த்தி நடிப்பில் ஹெச் வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம், 2017ம் ஆண்டு வெளியானது. போலீஸ் ஆக்ஷன் ஜானர் மூவியாக உருவான இது, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட இதே ஜானரில் மலையாளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணூர் ஸ்குவாட். ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார்.
மம்மூட்டி, ரோனி டேவிட் ராஜ், அஜீஸ் நெடுமங்காட், சபரீஸ் வர்மா என இந்த நான்கு பேர் கொண்ட குழுவினருக்கு, கேரள காவல்துறையில் கண்ணூர் ஸ்குவாட் என பெயர். எப்பேற்பட்ட க்ரைம் வழக்குகளையும் தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை பிடிப்பதே இவர்களது தனிச் சிறப்பு. அப்படியாக இவர்களிடம் ஒரு கொலை வழக்கு வருகிறது. காசர்கோட் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் வஹாப் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.
அவரது குடும்பத்தினரையும் கொடூரமாக தாக்கும் அந்த கொலைகார கும்பல், வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துச் செல்கிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இறுதியாக இந்த வழக்கும் மம்மூட்டி & கோ-வின் கண்ணூர் ஸ்குவாட் வசம் செல்கிறது.
10 நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற ஆர்டருடன் விசாரணையை தொடங்குகிறது கண்ணூர் ஸ்குவாட். கொலையை செய்தது யார், எதற்காக நடந்தது, கொலையாளிகளை கண்ணூர் ஸ்குவாட் டீம் 10 நாட்களுக்குள் கைது செய்ததா இல்லையா என்பது தான் இந்தப் படத்தின் முழு கதையும். படம் தொடங்கியதில் இருந்தே ஜெட் வேகத்தில் நகர்கிறது.
அப்துல் வஹாப்பின் கொலை வழக்கை விசாரிக்க, முதலில் செல்போனில் பேசியவர்களை ஃபில்டர் செய்வது, சிம் கார்ட் ட்ராக்கிங் என டீட்டெய்லிங்காக கதைக்குள் ரசிகர்களை கொண்டு வந்துவிடுகிறார் இயக்குநர். இன்னொரு பக்கம் மம்மூட்டி, ரோனி டேவிட் ராஜ், அஜீஸ் நெடுமங்காட், சபரீஸ் வர்மா நால்வரும் சீரியஸ்ஸான கெட்டப்பில் ஒரிஜினலான போலீஸ் விசாரணை எப்படி இருக்கும் என்பதை கண் முன்னே காட்டியுள்ளனர்.
வஹாப்பை கொலை செய்தவர்கள் யார் எனத் தெரிந்ததும், அவர்களை விரட்டிப் பிடிக்க ஊர் ஊராக சுற்றுகிறது கண்ணூர் ஸ்குவாட். கேரளாவில் இருந்து தொடங்கி மும்பை, உத்தரபிரதேசம் என இந்தியா - நேபாளம் பார்டர் வரை பரபரக்க வைத்துள்ளனர். கேரளா டூ நேபாளம் பார்டர் வரையிலான கண்ணூர் ஸ்குவாடின் பயணமும், அவர்கள் செல்லும் டாடா சுமோ காரும் அப்படியே தீரன் அதிகாரம் ஒன்று படத்தை நினைவில் கொண்டு வருகிறது.
அதேபோல், உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தினுள்ளே செல்லும் கண்ணூர் ஸ்குவாட் டீமை, அங்குள்ள மக்கள் சிறை பிடிப்பதும், அங்கு நடக்கும் சண்டைக் காட்சியும் தீரன் அதிகாரம் படத்தின் காப்பி பேஸ்ட் போன்றே இருக்கிறது. மேலும், இந்த கதை 2017ம் ஆண்டு நடைபெறுவதை போல காட்டப்படுகிறது. ஆனால், சில காட்சிகளில் 2021ம் ஆண்டு மாடல் கார்கள் பின்னணியில் வலம் வருவதை இயக்குநர் கவனிக்காமல் விட்டது கொஞ்சம் உறுத்துகிறது.

மம்மூட்டி உட்பட 4 போலீஸாரின் குடும்பம் பற்றியெல்லாம் அதிகமாக காட்டாமல், கதைக்குள்ளேயே படத்தை நகர்த்தியது புத்திசாலித்தனம் எனலாம். இருப்பினும் படத்தின் நீளம் சில நேரங்களில் ரசிகர்களை அயர்ச்சிக்குள்ளாக்கி விடுகிறது. யானை தந்தங்கள் கடத்தலையும் படத்திற்குள் கொண்டு வந்த இயக்குநர், அதுபற்றி எந்த விவரங்களையும் காட்டவில்லை. அதேநேரம், சீனியர் கேட்டகிரி போலீஸார்களுக்கு, களத்தில் இறங்கி விசாரணை செய்யும் போலீஸ்கள் வேட்டை நாய்கள் தான் என நேரிடையாகவே சொல்லியுள்ளார்.
அதிகாரம் எப்போதுமே தனக்கு கீழே இருப்பவர்களை அடியாட்களைப் போல தான் நடத்தும் என்பதையும் போகிறப் போக்கில் காட்டியதும் பாராட்டுதலுக்குரியது. சில காட்சிகளே என்றாலும், ஐபிஎஸ் மனுநீதி சோழனாக வரும் கிஷோர் கவனம் ஈர்த்துள்ளார். அதேபோல், ஓவர் பில்டப் உடன் அறிமுகமாகும் வில்லன்கள் இறுதியில் டம்மியாக போவதும் கொஞம் ஏமாற்றம் தான். மம்மூட்டியின் ஆக்ஷன் ட்ரீட் வேண்டும் என்றால், கண்ணூர் ஸ்குவாட் நிச்சயம் ஓடிடி ரசிகர்களுக்கு நல்ல அனுபவம் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications











