ஓடிடியில் நீக்கப்பட்ட வராஹ ரூபம் பாடல்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. அப்போ படத்துல அந்தப் பாடல் கிடையாதா?
பெங்களூரு : ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியானது காந்தாரா படம்.
இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படம் இந்திய அளவில் பல மொழிகளில் வெளியானது.
20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட காந்தாரா படம் சர்வதேச அளவில் 400 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படம்
கன்னட மொழியில் யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் படங்களின்மூலம் கவனம் பெற்றுள்ள தயாரிப்பு நிறுவனமான ஹாம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியானது காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த இந்தப் படத்தில் கிஷோர், சப்தமி கௌடா உள்ளிட்டோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

5 மொழிகளில் வெளியான காந்தாரா
இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்திய அளவில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியாகி அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்தது. வசூலிலும் கலக்கியது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் சர்வதேச அளவில் 400 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக ஹாம்பாலே பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த் பாராட்டு
ஆனால் இந்தப் படம் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதாக ஒருசாரார் படத்தின்மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.ஆயினும் இந்தப் படம் வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் ரசிகர்களையும் பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தும் இந்தப் படத்தை பார்த்து தன்னுடைய பாராட்டுக்களை பகிர்ந்துள்ளார்.

ஓடிடியில் வெளியான காந்தாரா
இந்தப் படம் நில அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்த நிலையில், படத்தின் தெய்வ நர்த்தகர் கேரக்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதனிடையே இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.

வராஹ ரூபம் பாடல் நீக்கம்
இந்தப் படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிய நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்வகையில் படத்தின் வராஹ ரூபம் பாடல் நீக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் குறித்து மலையாளத்தில் தனிப்பாடல்களை இயற்றிவரும் தைக்குடம் பிரிட்ஜ் பேண்ட் குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்களது பாடல் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஓடிடி தளத்தில் நீக்கப்பட்ட பாடல்
கடந்த 2017ல் வெளியிடப்பட்ட தங்களது நவரசம் பாடலின் காப்பிதான் வராஹ ரூபம் என்று அவர்கள் காப்புரிமைக்காக வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை விசாரித்த நீதிபதிகள், தியேட்டர்கள், அமேசான், யூடியூப், ஸ்பாடிஃபை, விங்க் மியூசிக், ஜியோ சவான் போன்றவற்றில் இந்தப் பாடலை பயன்படுத்த தடை விதித்துள்ளனர். இதையடுத்து தற்போது அமேசான் பிரைமில் இந்தப் பாடல் இடம்பெறவில்லை.


Click it and Unblock the Notifications











