குபேரா படத்துக்கு இப்படியொரு சிக்கலா?.. தனுஷுக்கு ஹிட் கிடைக்குமா?.. ஓடிடியால் வந்த வினை?
சென்னை: இந்திய சினிமாவையே சமீப காலமாக ஓடிடி நிறுவனங்கள் தான் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் புலம்பி வருகின்றனர். தியேட்டரில் பெரிதாக படங்கள் ஓடாத நிலையில், மக்கள் வீட்டில் இருந்து பார்க்கும் ஓடிடிக்கு அதிக தொகைக்கு விற்று விட்டாலே போட்ட காசை எடுத்து விடலாம் என்பதால், ஓடிடி நிறுவனங்கள் சொல்பேச்சைக் கேட்க தொடங்கிய நிலையில், கடந்த சில மாதங்களாக அவர்கள் வைப்பது தான் சட்டம் என்று ஆகிவிட்டதாக கூறுகின்றனர்.
பல பெரிய படங்கள் நேரடி மோதலை தவிர்க்க நினைத்தாலும், ஓடிடி நிறுவனங்கள் அந்த தேதியில் படத்தை வெளியிட்டால் தான் சொன்ன பணத்தைக் கொடுப்போம் என்றும் இல்லையென்றால் பல கோடி ரூபாயை குறைத்துவிடுவோம் என்றும் மிரட்டி வருகிறார்களாம்.

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, ஜியோ ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஆஹா என பல்வேறு ஓடிடி நிறுவனங்களை நம்பியே புதிய படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் வேறு வழியில்லாமல் அவர்கள் சொல்வதை கேட்டு ரிலீஸ் தேதியை முடிவு செய்கின்றனர். நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா படத்துக்கும் தற்போது அப்படியொரு சிக்கல் வந்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளரே வெளிப்படையாக கூறியுள்ள நிலையில், படம் முழுமையாக முடிவடைந்ததா? அல்லது கடைசி நேர அவசரம் சிக்கலை உண்டாக்குமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
தனுஷின் குபேரா: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகி உள்ள குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் ஓடிடி நிறுவனத்தின் அழுத்தம் தான் இந்த அவசரத்துக்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

ஓடிடி நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன: தனுஷின் குபேரா படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்யவே திட்டமிட்டு இருந்தோம். ஜூலை மாதத்தில் ஒரு நல்ல நாளை கொடுங்க எனக் கேட்ட நிலையில், ஜூன் 20ம் தேதியை அவர்கள் முடிவு செய்துவிட்டனர். ஓடிடி நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக இந்த மாதமே படத்தை வெளியிடும் முயற்சியில் உள்ளோம் என குபேரா படத்தின் தயாரிப்பாளர் சுனில் நரங் பகீர் கிளப்பியுள்ளார். குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓவர் டார்ச்சர்: தியேட்டர் பிசினஸ் பெரிதும் அடிவாங்கிய நிலையில், ரசிகர்கள் முதல் 3 நாட்களுக்கு மேல் திரையரங்குகள் பக்கமே வருவதில்லை என்கின்றனர். வெள்ளிக்கிழமை மாலை தான் கூட்டம் தியேட்டருக்கு வருகிறது என்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஓடினால் தான் வசூல் வரும் என்றும் கூறுகின்றனர். இதன் காரணமாக ஓடிடி நிறுவனங்களை தயாரிப்பாளர் நம்பி களமிறங்கிய நிலையில், ஆரம்பத்தில் அவர்கள் கொடுத்த பெரிய தொகையால் சந்தோஷப்பட்ட பலரும் இன்று தொகையையும் குறைத்து கொடுக்கும் தொகைக்கு ஏகப்பட்ட கண்டிஷன்களையும் போட்டு வருவதால் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
கோலிவுட், டோலிவுட்டை காப்பாற்றுமா குபேரா?: தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படம் வெற்றி பெற்றால் தான் கோலிவுட் மற்றும் டோலிவுட் தியேட்டர்கள் மற்றும் படக்குழுவினர் சந்தோஷமடைவார்கள். அவசரத்தின் காரணமாக முழுமையான படமாக வெளியாகவில்லை என்றால் கடைசியில் படத்துக்கு பெரிய சிக்கல் ஆகிவிடும்.


Click it and Unblock the Notifications











